செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாணம் சுற்றுலா மேம்பாட்டுக்கு இந்திய ‘டீம் பைசன்’ ஆதரவு | வடக்கு அழகை பாராட்டிய பயணிகள்

யாழ்ப்பாணம் சுற்றுலா மேம்பாட்டுக்கு இந்திய ‘டீம் பைசன்’ ஆதரவு | வடக்கு அழகை பாராட்டிய பயணிகள்

2 minutes read

யாழ்ப்பாணம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. இந்தப் பிரதேசத்தின் அழகை வியந்து ரசித்தோம். இங்குள்ள மக்களின் விருந்தோம்பல் பண்பு எம்மைக் கவர்ந்திழுத்துள்ளது. மறக்க முடியாத பல நல்ல அனுபவங்களைத் தந்த இங்கு, எமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட ஏனையோரையும் சுற்றுலா வருமாறு நாம் ஊக்குவிப்போம். சுற்றுலாத்துறையில் வடக்கு மாகாணம் இன்னமும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம், என்று இந்தியாவின் 5 மாநிலங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த துவிச்சக்கரவண்டிப் பயணக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும் இந்தியாவிலிருந்து வருகை தந்த ‘டீம் பைசன்’ (Team Bison) துவிச்சக்கரவண்டிப் பயண அணியினருக்கான கௌரவிப்பு நிகழ்வு, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சனிக்கிழமை (04)  இரவு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியாவிலிருந்து வருகை தந்த குழுவினருக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். அவர் தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில்,

ஆயிரக்கணக்கான வருடங்களாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிகச் சிறந்ததும் நெருக்கமானதுமான உறவு காணப்படுவதுடன், இந்தியா எமக்குத் தொடர்ந்தும் பல வழிகளில் உதவிகளை வழங்கி வருகின்றது.

மூன்று தசாப்த காலக் கொடிய போரால் வடக்கு மாகாணம் கடுமையாகப் பாதிக்கபட்டிருந்தாலும், தற்போது இங்கு மிகவும் அமைதியான சூழல் நிலவுகின்றது.

யாழ்ப்பாணத்துக்கும் சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கும் இடையிலான நேரடி விமான சேவை, காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை என்பன ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், இந்தியச் சுற்றுலாவிகளின் வருகை எமது மாகாணத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. நாமும் ஒரு சகோதரனைப் போல இந்தியாவுடன் மிகச் சிறந்த உறவைப் பேணி வருகின்றோம்.

வடக்கு மாகாணத்தில் தற்போது சுற்றுலாத்துறை வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. அதேநேரம், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் உறுதியான தலைமையின் கீழ், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான மிகப்பெரியதொரு போராட்டத்தை எமது நாடு தற்போது முன்னெடுத்து வருகின்றது. போதைப்பொருளை எமது நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு நாம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றோம்.

அதேவேளை, எமது ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானதாகும். எமது மூதாதையர்கள் பாரம்பரிய கிராமப்புற உணவுகளை உட்கொண்டதாலேயே மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

ஆனால், சிறுவர்கள் தற்போது துரித உணவுகளை நாடும் நிலை காணப்படுகின்றது. இந்த நிலைமை மாற்றப்பட்டு, ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளின் பக்கம் நாம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வலிமையான சமூகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சைக்கிள் சுற்றுலா, இளைஞர்களுக்கு ஓர் உத்வேகத்தை அளிப்பதுடன், சமூகத்துக்குச் சாதகமான பங்களிப்பை எவ்வாறு வழங்குவது என்பதற்கான சிறந்ததொரு முன்மாதிரியாகும்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், இராமாயண யாத்திரையுடன் தொடர்புடைய பல இடங்கள் வடக்கில் அடையாளங்காணப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

நெடுந்தீவு போன்ற தீவுகளில் அனுமனின் பாதச் சுவடுகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். இவ்வாறான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை நீங்கள் பார்வையிடுவதுடன், உங்களின் இந்தப் பயண அனுபவங்களை இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு, எதிர்காலத்தில் அவர்களையும் வடக்கு மாகாணத்துக்கு வருகை தர நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

‘போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகிய உயரிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில், இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ;டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 40 பேர் பங்கேற்றிருந்தனர்.

இவர்களுக்கான கௌரவத்தை வடக்கு மாகாண ஆளுநர், சுற்றுலாப் பணியகத் தலைவர், பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்.

அத்துடன், இந்தக் குழுவினர் நயினாதீவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உதவிப் பொருட்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.