செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு | பொலிஸார் எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு | பொலிஸார் எச்சரிக்கை!

1 minutes read

சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய தொடர்பாடல் தளங்கள் ஊடாக பெண்களை ஏமாற்றி, நிதி மோசடி, பாலியல் சுரண்டல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தளங்கள் ஊடாக பெண்களுடன் நட்பை ஏற்படுத்தி, பின்னர் அவர்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்துதல் அல்லது பணம் மற்றும் நகைகளை மோசடி செய்தல் போன்ற குற்றங்கள் பதிவாகியுள்ளன.

சில சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போதைப்பொருள் அல்லது மயக்கமருந்து கலந்த பானங்களை வழங்கி, அவர்கள் நினைவிழந்த பின்னர் துஷ்பிரயோகம் அல்லது திருட்டுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் சிலர் பெண்களின் நம்பிக்கையை வெல்வதற்காக திருமண வாக்குறுதிகளை வழங்கி, பின்னர் தந்திரமான முறையில் பணம் மற்றும் சொத்துக்களைப் பறித்துள்ளனர்.

இவ்வாறான சில சம்பவங்கள் படுகொலை போன்ற பாரிய குற்றங்களிலும் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சமூகப் பொலிஸ் பிரிவினர் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், இவ்வாறான நபர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் தகவல்களைத் திரட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் அல்லது இணையத்தளங்கள் ஊடாக அறிமுகமாகும் நபர்களிடம் பணம், நகைகள் அல்லது இதர பெறுமதிமிக்க பொருட்களை ஒப்படைக்க வேண்டாம்.

முகம் தெரியாத நபர்களுடன் முக்கியமான புகைப்படங்கள், காணொளிகள்  அல்லது தனிப்பட்ட விபரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.

சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள், செய்திகள் மற்றும் அறிமுகமில்லாதவர்களைச் சந்திப்பதற்கான அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.

இவ்வாறான மோசடிகளுக்கு ஆளானவர்கள் அல்லது இது குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், 118, 119, 107 அல்லது 109 பொலிஸ் அவசர உதவி எண்களையும் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இவ்வாறான மோசடித் திட்டங்களில் சிக்கி ஏமாற வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.