செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

1 minutes read

அரசியலமைப்பு திருத்தம் மூலம் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துவரும் திடீர் முயற்சிகள், நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு பவுண்டேஷன் நிறுவனத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகிரங்க கலந்துரையாடலில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர்,

ஒரு நாட்டின் ஜனநாயகம் கட்டியெழுப்பப்படும் முக்கிய தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை மற்றும் சுதந்திர ஊடகம், சிவில் சமூக செயற்பாடுகள் ஊடாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும்.

தற்போதைய அரசாங்கம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 63லிருந்து 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65லிருந்து 67 ஆகவும் அதிகரிப்பதற்கு திடீர் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறது.

அதேவேளையில் இந்த இரு உயர் நீதிமன்றங்களிலும் நிலவும் 8 நீதிபதி பதவிகளுக்கான வெற்றிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளது. இவ்வாறான தன்னிச்சையான அரசியலமைப்பு திருத்தங்கள் ஜனநாயகத்தின் மீதான பாரிய தாக்குதலாகும். அத்தோடு அது நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தும்.

நீதியை நிலைநாட்டுவதற்கும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் இந்த நடவடிக்கை ஒரு கடுமையான சவாலாகும். இது ஒட்டுமொத்த நீதித்துறை கட்டமைப்பிற்கும் ஏற்பட்டுள்ள பாரதூரமான தாக்கமாகும்.

‘வளம்மிக்க நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறக் கூடாது. இவ்வாறான திடீர் அரசியலமைப்பு திருத்தங்கள் மக்கள் ஆணையை முற்றாக அழித்து, நீதிமன்றத்தின் கௌரவத்தை சீர்குலைக்கின்றது.

இலங்கைக்கு தற்போதைய சூழலில் தேவைப்படுவது சர்வாதிகாரமல்ல, மாறாக ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே ஆகும். இனம், மதம், சாதி, வர்க்கம் அல்லது கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு, ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் தயாராகவுள்ளதுடன், சர்வாதிகாரத்தை ஒழிப்பதற்கு முன்னின்று உழைக்கும்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 12லிருந்து 20 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 11லிருந்து 17 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளுக்கு தட்டுப்பாடு நிலவினால், எண்ணிக்கையை அதிகரிக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், இந்த முறையில் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு ஒருபோதும் உடன்பட முடியாது.

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது நீதிமன்றத்திற்கான வசதிகளை வழங்குவதாகும், ஆனால் ஓய்வுபெறும் வயதை இவ்வாறு திடீரென அதிகரிப்பது நீதிமன்றத்தின் நற்பெயரையும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் முற்றாக வீழ்த்தும் செயலாகும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.