0
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவியதால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரானும் உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்து போராடுவதற்கான தங்களது முயற்சிகளுக்கு அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் பெரும் தடையாகவிருப்பதாக ஈரான் தொடர்ந்தும் குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் ஈரானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான வெண்டிலேட்டர்களை வழங்க தயாராகவிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது இது குறித்து அவர் கூறியதாவது:-
ஈரான் மிகவும் வித்தியாசமான நாடு. ஆரம்பத்தில் ஈரான் முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் கைப்பற்ற முயற்சி செய்தது. ஆனால் தற்போது அவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர். அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள்.
எனக்கு இது தேவையில்லை. எனினும் ஈரான் விரும்பினால் அவர்களுக்கு உதவி செய்ய நான் முன்வருவேன். அவர்களுக்கு வெண்டிலேட்டர்கள் தேவைப்பட்டால் எங்களிடம் உதவி கேட்கலாம். நாங்கள் அவர்களுக்கு வெண்டிலேட்டர்களை அனுப்புவோம். எங்களிடம் ஆயிரக்கணக்கும் அதிகமான வெண்டிலேட்டர்கள் உள்ளது என கூறினார்.