செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் கருப்பு, வெள்ளையை தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை நோய்… தவிர்க்கும் முறைகளும்…!

கருப்பு, வெள்ளையை தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை நோய்… தவிர்க்கும் முறைகளும்…!

2 minutes read

புதுடெல்லி
கொரோனாவின் 2-வது அலை கடந்த ஆண்டைவிட மிகத்தீவிரமாகி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளை தீவிரமான பாதிப்புக்கு ஆளாக்கியுள்ள கருப்பு பூஞ்சை நோயை தொடர்ந்து, வெள்ளை பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டது. தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று நோய் அறியப்பட்டிருப்பது மருத்துவ துறையை சவாலாகவும் அச்சத்திலும் மாற்றியுள்ளது.

நாடு முழுக்க கருப்பு பூஞ்சையும், வெள்ளை பூஞ்சை தொற்று அபாயமும் இருக்கும் நிலையில் அவற்றைவிட ஆபத்தான மஞ்சள் பூஞ்சை தொற்று என்னும் ஆபத்தான தொற்றுநோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் 45 வயதான ஒரு நோயாளிக்கு மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை பாதிப்புகளைவிட இந்த மஞ்சள் பூஞ்சை மிகுந்த ஆபத்தானது என்று கூறப்படுகிறது.

தற்போது அந்த நோயாளி பிரபல கண், காது, மூக்கு சிறப்பு மருத்துவர் டாக்டர் பிரிஜ் பால் தியாகி கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மருத்துவர் பிரிஜ் பால் கூறியுள்ளதாவது:-

பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சி.டி.ஸ்கேன் செய்து பரிசோதித்த போது நார்மலாக இருந்தது. ஆனால் அவருக்கு எண்டோஸ்கோபி செய்த போது அவருக்கு கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்று இருப்பது தெரியவந்தது. மஞ்சள் பூஞ்சை பொதுவாக முதலைகள், பாம்புகள் உள்ளிட்ட ரெப்டைல்ஸ் வகை உயிரினங்களிடம் மட்டுமே காணப்படும்.

தற்போது முதன்முறையாக மனிதர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவின் மூலம் இந்த மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக உபயோகப்படுத்தும் ஸ்டெராய்டு, பூஞ்சை தடுப்பு மருந்துகளினால் இந்த பாதிப்பு ஏற்படும். கொரோனாவினால் குணமானவர்களும் இதனால் பாதிக்கப்படலாம்.

மஞ்சள் பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதீத சோர்வு, பசியின்மை ஏற்பட்டு அதன் மூலம் உடல் எடை குறைவு, உள்ளே ரத்தம் கசியும் மற்றும் உடல் உறுப்புகள் செயல் இழப்பு போன்றவை நேரும். ஆம்போடெட்ரிசின் பி எனப்படும் பூஞ்சை தடுப்பு மருந்து இதற்கு முதன்மையான சிகிச்சை ஆகும்.

தற்போது இந்த மருந்து தான் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு முக வீக்கம், மங்கும் பார்வை, இரண்டாக தெரியும் காட்சிகள், நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், இருமலின் போது ரத்தம் வருவது, அதீத தலைவலி போன்ற பாதிப்புகள் இருக்கும்.

ஆனால் மஞ்சள் பூஞ்சை பாதித்தவர்களுக்கு உடலின் உள்ளே பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டாலோ, பசியின்மை, உடல் எடை குறைவு ஆகிய மாற்றங்கள் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.

மஞ்சள் பூஞ்சை தொற்று புதிதானதோ அல்ல அரிதானவையோ அல்ல. சற்று முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் இதை தவிர்க்க முடியும்.

வீட்டில் பழைய உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கழிப்பறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கழிவு பொருள்களில் பூஞ்சை தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதால் அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டுக்குள் அதிகப்படியான ஈரம் இருக்க கூடாது.

ஈரமான இடங்களில் பூஞ்சை தொற்று அதிகமாக இருக்கும். வீட்டுக்குள் சூரிய ஒளி படர வேண்டும். வீட்டில் காற்றோட்டம் இருக்க வேண்டும். தரையை ஈரமாக வைத்திருக்க வேண்டாம். மொத்தத்தில் உங்கள் வீடு மற்றும் நீங்கள் புழங்கக்கூடிய இடங்களை சுத்தமாக வைத்துகொண்டாலே பூஞ்சை தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

நன்றி- மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.