யாழ்ப்பாணம், முற்றவெளி மைதானத்தில் பெரும் குழப்பத்துடன் தென்னிந்தியப் பிரபல பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்வு நடைபெற்று முடிந்துள்ளது. நேற்றிரவு அங்கு இடம்பெற்ற அசம்பாவிதங்களில் சிக்கி பொதுமக்கள் மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் இரசிகர்களின் தாக்குதலுக்கு இலக்கான 8 பொலிஸார் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். அதேவேளை, அசம்பாவிதங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இசை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை, இலவசமாக நிகழ்வைக் கண்டு கழித்துக்கொண்டிருந்த இரசிகர்கள் தடுப்புக்களை உடைத்துக் கொண்டு, கட்டண அனுமதி பெற்று, நிகழ்வைக் கண்டு களித்துக்கொண்டிருந்த இரசிகர்கள் வலயத்தினுள் நுழைந்து, மேடை வரையில் சென்றிருந்தனர். அத்துடன் , கமராக்கள் பொருத்தப்பட்டிருந்த உயரமான மேடைகள், ஒலி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்த மேடைகள், பனை மரங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறி அட்டகாசத்திலும் ஈடுபட்டனர்.
கட்டுக்கடங்காமம்போன இரசிகர் கூட்டத்தால் கதிரைகள், தண்ணீர்த் தாங்கிகள் உள்ளிட்டவையும் சேதமாக்கப்பட்டன.
இதனால் இசை நிகழ்வு இடையில் சில மணி நேரங்கள் இடைநிறுத்தப்பட்டு, பொலிஸார், விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் மேலதிகமாக மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, இசை நிகழ்வை மீள ஆரம்பித்து சில மணித்தியாலங்களுக்குள் நிகழ்வை அவசர அவசரமாக முடித்துக்கொண்டனர் ஏற்பாட்டாளர்கள்.
எனினும், இந்தக் கலவரத்துக்கும் மத்தியிலும் தென்னிந்திய பிரபல நடிகை தமன்னாவின் நடன நிகழ்வு அரங்கேறி இருந்தது.
மேற்படி குழப்பங்களுக்கு நிகழ்வின் ஏற்பாடுகளில் உள்ள குறைகளே காரணம் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் தமது கருக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
பெருமெடுப்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஹரிஹரனின் இசை நிகழ்வு சீரான ஒழுங்குபடுத்தல் இன்மை, உரிய பாதுகாப்பு இன்மை காரணங்களால் குழப்பத்தில் முடிந்தது என்றும் அவர்கள் தங்கள் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.