செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் கார்த்திகை தீபம் 2024 | வீட்டில் விளக்கேற்ற நல்ல நேரமும், விளக்கேற்றும் முறையும்

கார்த்திகை தீபம் 2024 | வீட்டில் விளக்கேற்ற நல்ல நேரமும், விளக்கேற்றும் முறையும்

2 minutes read

திருக்கார்த்திகை வழிபாடு மாலையில் செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எந்த நேரத்தில், எந்த சமயத்தில், எப்படி விளக்கேற்றி வழிபட்டால் வீட்டில் நன்மைகளும், புண்ணிய பலன்களும் அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கார்த்திகை தீபத் திருநாள் இந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. திருவண்ணாமலை திருத்தலத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளன. அவை அனைத்தும் நிகழ்ந்தது கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரும் நாளில் தான். அதனால் தான் இந்த நாளில் இறைவனை ஜோதி வடிவமாக கண்டு வழிபட, வீடுகள் தோறும் தீபம் ஏற்றி கொண்டாடுகிறோம். ஈசன் ஜோதி வடிவமாக காட்சி அளித்தது, லிங்க வழிபாடு தோன்றியது, லிங்கோத்பவர் வழிபாடு தோன்றியது என அளவில்லாத பல சிறப்புகளையும், மிக முக்கியமான சிவ வழிபாடுகளும் தோன்றிய திருத்தலமாக திருவண்ணாமலை விளங்குவதால், திருக்கார்த்திகை தீபத் திருவிழா தோன்றிய தலமாகவும் திருவண்ணாமலையை குறிப்பிடுகிறோம்.

திருக்கார்த்திகை தீப வழிபாடு தோன்றிய தலம் என்பதால் திருவண்ணாமலையை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் உற்சவங்களின் அடிப்படையிலேயே வீடுகளிலும் வழிபாடு நடக்கும் வழக்கம் உள்ளது. திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்தன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். பரணி தீபம் என்பது பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படும் தீபமாகும். வீடுகளில் ஏற்றப்படும் பரணி தீபம் என்பது நம்முடைய முன்னோர்கள் யம வாதனையில் இருந்து விடுபட்டு, மோட்சம் அடைவதற்கான தீபம் ஆகும். ஆனால் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் பரணி தீபம் என்பது, “ஏகன் அனேகன்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஏற்றப்படுவதாகும்.

ஏகன் என்றால் இறைவன் ஒருவனே என்றும், அநேகன் என்றால் அவனே அனைத்து உயிர்களுக்குள்ளும் பல உருவங்களாக விரிந்து இருக்கிறான் என்றும், மீண்டும் உலக உயிர்கள் அனைத்தும் ஜோதி வடிவமான பரம்பொருளாகிய அந்த இறைவனுள் ஐக்கியமாக வேண்டும் என்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்துவதற்காகவே இந்த பரணி தீபம் ஏற்றப்படுகிறது. முதலில் ஒரு விளக்கு ஏற்றுவார்கள். பிறகு அதிலிருந்து 5 பெரிய அகல் விளக்குகளை ஏற்றுவார்கள். இந்த 5 விளக்குகளும் உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் ஒரே தீபமாக மாற்றப்படும். அந்த தீபத்தை எடுத்துச் சென்று பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள். இந்த தீபத்தை எடுத்துச் சென்று தான் மாலையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவார்கள்.

பார்வதி தேவி, கடும் தவம் இருந்து, சிவபெருமானின் உடலில் பாதியை பெற்றதும் இந்த தீபத் திருநாளில் தான். இதை கெளரவிக்கும் வகையில் வருடத்திற்கு ஒரே ஒரு முறை வெறும் 3 நிமிடங்கள் மட்டும், ஆனந்தமாக ஆடியபடியே அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தநாரீஸ்வரர் வெளியே வந்த வேகத்தில் மீண்டும் உள்ளே சென்று விடுவார். அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுத்த அடுத்த நொடி, அண்ணாமலையார் மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.”அண்ணாமலையாருக்கு அரோகரா” என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க, மகாதீபம் தரிசனம் நடைபெறும். இந்த காட்சியை நேரில் திருவண்ணாமலை செல்ல முடிந்தவர்கள் நேரிலும், முடியாதவர்கள் டிவியிலும் கண்டு தரிசித்த பிறகு, அண்ணாமலையாருக்கு அரோகரா என மனதார சிவ பெருமானை வேண்டி சொல்லி விட்டு அதற்கு பிறகே நம்முடைய வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்.

கார்த்திகை தீபத்தன்று மாலை 5 மணிக்கு முன்பாகவே விளக்குகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, திரி போட்டு, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசித்த பிறகு வீட்டில் மாலை 6 மணிக்கு பிறகு தான் விளக்கேற்ற வேண்டும். முதலில் வாசலில் விளக்கு ஏற்றி, மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைத்து வந்து, பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். அதற்கு பிறகு வீட்டின் மற்ற பகுதிகளிலும் விளக்கேற்ற வேண்டும். ஒரு முறை விளக்கு ஏற்றிய பிறகு அடிக்கடி எண்ணெய் ஊற்றுவது, திரியை தூண்டி விடுவது போன்றவற்றை செய்யக் கூடாது. அந்த விளக்கு எவ்வளவு நேரம் எரிகிறதோ, அவ்வளவு நேரம் எரிய விட்டு, தானாக குளிரும் படி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை விளக்கு எரிந்தால் கூட போதுமானதாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.