கதையின் நாயகனாக உயர்ந்த பிறகு தொடர் வெற்றிகளை அளித்து வரும் நடிகர் சூரி கதையின் நாயகனாக தொடரும் புதிய திரைப்படத்திற்கு ‘மண்டாடி’ என பெயரிடப்பட்டு, அதன் முதற்பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகும் ‘மண்டாடி’ எனும் திரைப்படத்தில் சத்யராஜ், சூரி, சுகாஸ், மஹிமா நம்பியார், ரவீந்திர விஜய், அச்யுத் குமார், சஞ்சனா நமீதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கடலில் நடைபெறும் பாய் மர படகு போட்டியை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் முதற் பார்வை வெளியீட்டிற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் பிரத்தியேக நிகழ்வு நடைபெற்றது. இதில் பட குழுவினருடன் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.
இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”காதல்- விடா முயற்சி- மீட்பு -உறவுகளின் முக்கியத்துவம்- பாய்மர படகு போட்டி – இதன் பின்னணியில் உணர்வுபூர்வமாக இப்படைப்பு உருவாகிறது” என்றார்.
இதனிடையே ‘மண்டாடி’ என்றால், கடலில் மீன் பிடிப்பதற்காக பயணிக்கும் மீனவர்களுக்கு, கடலின் நீரோட்டத்தையும், நீர் சுழலையும் துல்லியமாக அவதானித்து மீன்களின் வரத்தையும், அதன் திசையையும் குறிப்பிட்டு வலையை வீச சொல்வதற்கு ஆலோசனை சொல்லும் கடல் நீரியல் நிபுணரை தான் மண்டாடி என குறிப்பிடுகிறார்கள் என்பதும், இந்த சொல்- ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழக கடற்பகுதிகளில் அனுபவம் மிக்க மீனவர்கள் எப்படி ‘மண்டாடி’யாக இயங்குகிறார்கள்.
அதே தருணத்தில் பாய் மர படகு போட்டியின் போது நடுவராகவும், விதிமுறைகளை வகுப்பாளர்களாகவும் இயங்கக் கூடியவர்களும் ‘மண்டாடி’கள் தான் என்பதும் கவனிக்கத்தக்கது.
மண்டாடி படத்தின் முதற் பார்வையில், சூரியின் மீனவ தோற்றம் இரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.