யுரேனிய அளவை ஆபத்துக்கு அதிகமாக ஈரான் உயர்த்தினால் அதன் மீது அமெரிக்கா இன்னொரு தாக்குதல் நடத்துவதைக் குறித்து யோசிக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானையும் அதன் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியையும் டிரம்ப் கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆயத்துல்லா அலி கமேனியின் உயிரை தாம் விட்டுவைத்துள்ளதாகவும் சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“அவருடைய மூன்று அணுச்சக்தித் தளங்கள் அடியோடு அழிக்கப்பட்டன. அவருடைய இருப்பிடம் எங்கு இருந்தது என்று எனக்குத் தெரிந்திருந்தது. நான், இஸ்ரேலையோ உலகின் மிக வலிமையான அமெரிக்க இராணுவத்தையோ அவருடைய உயிரை மாய்க்க விடவில்லை. மரணத்திலிருந்து நான் அவரைக் காப்பாற்றினேன்” என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், ஈரான் மீதான தடைகளை அகற்றப் போவதில்லை என்று டிரம்ப் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி : இஸ்ரேல் போருக்குப் பின் ஈரான் தலைவர் ஆற்றிய முதல் உரை!
இதேவேளை, ஈரானின் தலைவரைப் பற்றி அவமரியாதையுடன் பேசியதை ஈரானின் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்ச்சி X தளத்தில் சாடினார்.
“டிரம்ப்புக்கு ஈரானுடன் அணுச்சக்தி ஒப்பந்தம் வேண்டுமென்றால், அவர் அவமரியாதையுடன் பேசுவதை நிறுத்தவேண்டும். ஈரான் தலைவரின் மில்லியன்கணக்கான தொண்டர்களின் மனத்தைக் காயப்படுத்துவதை நிறுத்தவேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.