இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 12 நாட்களாக இடம்பெற்று வந்த போர் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலுடன் நடந்த போரில் ஈரான் வெற்றி பெற்றதாக ஈரானின் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி அறிவித்திருக்கிறார்.
போர் நடக்கும்போது அவரை இஸ்ரேல் கொல்லக்கூடும் என்ற வதந்தி பரவியது. அவர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது.
அதன் பின்னர் ஆயத்துல்லா அலி கமேனி ஆற்றிய முதல் உரை இதுவாகும்.
எதிரிகளை வென்ற மாபெரும் நாடான ஈரானுக்கு வாழ்த்துகள் என்று அவர் கூறினார்.
ஈரானின் அணுச்சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் எதையுமே சாதிக்கவில்லை என்றும் ஆயதுல்லா கமேனி கூறினார்.
தொடர்புடைய செய்தி : அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது என ஈரான் அறிவிப்பு!
நடந்தது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் மிகைப்படுத்திக் கூறியதாகவும் அவர் உண்மையை மறைப்பதற்கு அவ்வாறு செய்ததாகவும் ஆயத்துல்லா தெரிவித்தார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களில் ஈரானிய அணுவாற்றலுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று அமெரிக்க உளவுத்தகவல்கள் கூறுவதாக அண்மையில் செய்தி கசிந்தது.
ஆனால், பெரிய சேதம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவும் கூறுகின்றனர்.