செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சோண்டர்ஸை வீழ்த்தி ஐ லீக் கிண்ணத்தை வென்றெடுத்தது றினோன்

சோண்டர்ஸை வீழ்த்தி ஐ லீக் கிண்ணத்தை வென்றெடுத்தது றினோன்

3 minutes read

இலங்கை கால்பந்தாட்டத்தில் பிரபல்யம் பெற்ற றினோன் கழகத்திற்கும் சோண்டர்ஸ் கழகத்திற்கும் இடையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற றினோன் கழகம், ஐ லீக் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

 

 

மிக நீண்ட காலத்திற்கு பின்னர் றினோன் கழகமும் சோண்டர்ஸ் கழகமும் சுகததாச விளையாட்டரங்கில் இறுதிப் போட்டி ஒன்றில் விளையாடியதால் அப் போட்டியைக் கண்டுகளிக்க 5000க்கும் மேற்பட்ட இரசிகர்கள் அரங்கிற்கு வருகை தந்திருந்தனர்.

இப் போட்டியின் முதலாவது பகுதியில் ஆதிக்கம் செலுத்திய சோண்டர்ஸ் கழகத்தினர், எதிரணியின் கோல் எல்லையை அடிக்கடி ஆக்கிரமித்த வண்ணம் இருந்தனர். குறிப்பாக சோண்டர்ஸ் கழகத்தின் முன்கள வீரர் பெத்தும் கிம்ஹான், மத்திய கள வீரர் நிரேஷ் சுந்தரராஜ் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து றினோன் கழகத்திற்கு நெருக்கடியைக் கொடுத்த வண்ணம் இருந்தனர்.

 

இதனிடையே பெத்தும் கிம்ஹான் குறைந்தது இரண்டு நிச்சயமான கோல் வாய்ப்புகளைத் தவறவிட்டார். றினோன் கோல்காப்பாளர் மொஹமத் ஹசன் சாமர்த்தியமாக செயல்பட்டு பெத்தும் கிமஹானின் முயற்சிகளை தடுத்து நிறுத்தினார்.

ஒரு புறத்தில் சோண்டர்ஸ் வீரர்கள் கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டுக்கொண்டிருக்க மறுபக்கத்தில் றினோன் கழகம் முதலாவது கோலைப் போட்டு முன்னிலை அடைந்தது.

போட்டியின் 23ஆவது நிமிடத்தில் மைதானத்தின் இடது புறத்திலிருந்து கவிந்து இஷான் உயர்வாக பரிமாறிய பந்தை தனது நெஞ்சினால் கட்டுப்படுத்திய ஆக்கிப் பைஸர் மறுகணமே வலது காலால் உதைத்து முதலாவது கோலைப் போட்டார்.

ஆனால், றினோன் கழகத்தினால் 5 நிமிடங்களே முன்னிலையில் இருக்க முடிந்தது.

28ஆவது நிமிடத்தில் றினோன் பின்களத்தில் ஏற்பட்ட தவறை நன்கு பயன்படுத்திக்கொண்ட பி.எம். அபிஷேக், ரீபவுண்ட் பந்தை கோலினுள் புகுத்தி சோண்டர்ஸ் சார்பாக கோல் நிலையை சமப்படுத்தினார்.

மேலும் 5 நிமிடங்கள் கழித்து சோண்டர்ஸ் அணித் தலைவர் இந்தீவ உதார பரிமாறிய பந்தை பெத்தும் கிம்ஹான் கோலினுள் இலாவகமாக புகுத்தி சோண்டர்ஸை முன்னிலையில் இட்டார்.

இடைவேளையின்போது சோண்டர்ஸ் கழகம் 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் றினோன் கழகத்தின் பின்கள வீரர்கள் இழைந்த தவறுகளால் சோண்டர்ஸ் கழகத்திற்கு கோல் போடும் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், றினோன் கோல்காப்பாளர் ஹசன் கடும் பிரயாசை எடுத்துக்கொண்டு அவற்றை முறியடித்த வண்ணம் இருந்தார்.

அதன் பின்னர் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடிய றினோன் கழகம், 56ஆவது நிமிடத்தில்  கோல் நிலையை 2 – 2 சமப்படுத்தியது.  அந்த சந்தர்ப்பத்தில் ஆக்கிப் பரிமாறிய பந்தை பரீத் அஹமத் கோலாக்கினார்.

 

 

இதனைத் தொடர்ந்து மிகச் சிறப்பாக விளையாடிய றினோன் கழகம் 71ஆவது நிமிடத்தில் 3ஆவது கோலைப் போட்டது. இம்முறை பரீத் அஹமத் தாழ்வாக பரிமாறிய பந்தை கோலினுள் புகுத்திய ஆக்கிப் தனது அணியை 3 – 2 என முன்னிலையில் இட்டார்.

அதற்கு சற்று முன்னர் மத்தியஸ்தர் தங்களுக்கு பாதகமாக செயற்பட்டார் எனத் தெரிவித்து சோண்டர்ஸ் கழக  வீரர்  ஒருவர்   மத்தியஸ்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சோண்டர்ஸ் அணித் தலைவர் இந்தீவ உதார, குறிப்பிட்ட அந்த வீரரை அமைதிப் படுத்த பெரும் பிரயத்தனம் எடுத்துக்கொண்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இதனிடையே மாற்று வீரராக களம் புகுந்த முன்னாள் தேசிய வீரர் எம்.என்.எம். பஸால் 90ஆவது நிமிடத்தில் பைஸர் அமானின் பந்து பரிமாற்ற உதவியுடன் றினோன் கழகத்தின் 4ஆவது கோலைப் புகுத்தினார்.

அதன் பின்னர் சற்று நேரத்தில் போட்டி நிறைவுக்கு வர ஐ லீக் சம்பியன் கிண்ணத்தை றினோன் கழகம் தனதாக்கிக்கொண்டது.

கடந்த வருடம் நடத்தப்பட்ட கலம்போ – சிட்டி கால்பந்தாட்ட இறுதிப் போட்டியிலும் இதே இரண்டு அணிகள் மோதிக்கொண்டபோது றினோன் கழகம் இதே எண்ணிக்கையில் வெற்றிபெற்று சம்பியனாகி இருந்தது.

 

 

 

 

இந்த சுற்றுப் போட்டியில் அதிகப்பட்சமாக 6 கோல்களைப் போட்ட பெத்தும் கிம்ஹான் (சோண்டர்ஸ்), ஆக்கிப் பைசர் (றினோன்) ஆகிய இருவருக்கும் இணை விருதாக பாதணிகள் வழங்கப்பட்டது. சிறந்த கோல் காப்பாளருக்கான கையுறையை றினோன் கோல்காப்பாளர் மொஹமத் ஹசன் வென்றெடுத்தார்.

இரண்டு குழுக்களில் தலா 4 அணிகள் வீதம் நடத்தப்பட்ட ஐ லீக் கால்பந்தாட்டப் போட்டியில் சம்பியனான றினோன் கழகத்திற்கு 900,000 ரூபா மொத்த பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்ற சோண்டர்ஸ் கழகத்திற்கு 700,000 ரூபா மொத்த பணப்பரிசும் வழங்கப்பட்டது.

அத்துடன் சம்பயினான அணியினருக்கு தங்கப் பதக்கங்களும் இரண்டாம் இடத்தைப் பெற்ற அணியினருன்கு வெள்ளிப் பதக்கங்களும் சூட்டப்பட்டது.

இந்த சுற்றுப் போட்டியில் அரை இறுதிகளுடன் வெளியேறிய இரண்டு அணிகளுக்கு தலா 400,000 ரூபாவும் முதல் சுற்றுடன் வெளியேறிய 4 அணிகளுக்கு தலா 300,000 ரூபாவும் வழங்கப்பட்டது.

கொட்டாஞ்சேனை செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் எம்.ஐ.ஏ. மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் ஐ லீக் கால்பந்தாட்டப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஐ லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்துவதற்கு பச்சைக் கொடி காட்டிய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமருக்கும் பங்குபற்றிய கழகங்களின் உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவித்த செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் எம்.ஐ.ஏ. மணிவண்ணன், இந்த சுற்றுப் போட்டியை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்த உதவிய ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களை நன்றி பெருக்குடன்  வெகுவாக பாராட்டினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.