ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா தொடர்ந்து மீறி வருவதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அமெரிக்காவும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளும் தங்களது நடவடிக்கைகளுக்காக “மறக்க முடியாத பாடங்களைக் கற்க நேரிடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மொஜ்தபா கமேனி வெளியிட்ட அறிக்கை சனிக்கிழமை ஈரானின் அரசுத் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், அமெரிக்கா ஒப்பந்தத்தை மதிக்காமல் தொடர்ந்து செயல்படுவதன் மூலம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கையெழுத்து எந்த மதிப்பும் இல்லாததாகவும், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நடவடிக்கைகள் அதன் ஆதிக்க மனப்பான்மை, அடக்குமுறை மற்றும் வன்முறையை வெளிப்படுத்துவதாகவும், அவை அந்நாட்டின் வெளிநாட்டு கொள்கையின் பிரிக்க முடியாத அங்கங்களாக இருப்பதாகவும் கமேனி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்கா போர் பதற்றத்தை அதிகரிக்க முயற்சித்து வருவதாகவும், அதற்கு பதிலளிக்க ஈரான் மக்களும் எதிர்ப்பு முன்னணியும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தகுந்த பதிலடி வழங்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா அண்மையில் ஈரானின் பாலங்கள், இரயில் பாதைகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதற்கு பதிலடியாக, குவைத்தின் பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும், அதன் பின்னர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு குவைத் அதிகாரிகள் மக்களிடம் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தனது “உண்மையான முகத்தை” உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறிய கமேனி, அந்த நாடு ஏமாற்றுத்தனம், நம்பகத்தன்மையின்மை மற்றும் பகுத்தறிவற்ற அணுகுமுறையுடன் செயல்பட்டு வருவதாகவும் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.