ஜிம்பாப்வேயின் கரீபா ஏரியில் (Lake Kariba) படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கர விபத்தில் 18 குழந்தைகளும் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (12) கடும் அலைகள் மோதியதில் படகு கவிழ்ந்தது. தொடர் மீட்புப் பணிகளில் 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது.
பழுதடைந்த நிலையில் இருந்த இந்தப் படகு, கரீபா நகரத்திலிருந்து நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள கிராமப்புற மீன்பிடிச் சமூகங்களுக்குச் சென்று கொண்டிருந்தது. அங்கு வீதிகள் சேதமடைந்துள்ள நிலையில், பொது போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
படகில் எத்தனை பேர் இருந்தனர் அல்லது எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், பயணிகளின் எண்ணிக்கை 153ஆக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. படகின் அதிகபட்ச கொள்ளளவு 90 பேர் மட்டுமே என்பதும், தற்போது 77 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வே பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் தொடர்பான தகவல்கள் மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. டிக்கெட் வாங்கும் வயதுக்குக் குறைவானவர்கள் பயணிகள் பட்டியலில் சேர்க்கப்படாததால், படகில் இருந்த சிறு குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து ஆரம்பத்தில் அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. பின்னர் வெளியிடப்பட்ட பொலிஸ் பட்டியலில், உயிரிழந்த குழந்தைகளில் 16 பேர் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், மிகச் சிறிய குழந்தைக்கு வயது 1 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரீபா ஏரி, உலகின் மிகப்பெரிய செயற்கை ஏரியாகும். இது 1950களின் பிற்பகுதியிலும், 1960களின் முற்பகுதியிலும் சாம்பேசி நதியில் (Zambezi River) அணை கட்டப்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்டது.
இந்த ஏரி 200 கிலோமீட்டருக்கும் (124 மைல்) அதிகமாக நீண்டுள்ளது. மேலும், சில இடங்களில் 40 கிலோமீட்டர் (25 மைல்) அகலம் கொண்டது. ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் இந்த ஏரியைப் பகிர்ந்து கொள்கின்றன; இரண்டு நாடுகளின் எல்லையும் ஏரியின் நடுவே செல்கிறது.
விபத்தின் முழு விவரங்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.