இரட்டைக் கொலையாளியும், பாலியல் குற்றவாளியுமான சைமன் லெவி (40) வாழ்நாள் முழு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
புதன்கிழமை ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நீதிபதி மார்க் லுக்ராஃப்ட், அவருக்கு ‘வாழ்நாள் முழு சிறை’ தண்டனையை வழங்கினார். அதாவது அவர் ஒருபோதும் விடுவிக்கப்பட மாட்டார்.
லெவி, 2025 மார்ச்சில் 53 வயதான கார்மென்சா வலென்சியா-த்ருஜில்லோவையும், ஐந்து மாதங்களுக்குப் பிறகு 39 வயதான ஷெரில் வில்கின்ஸையும் கொலை செய்தார்.
அதே ஆண்டின் தொடக்கத்தில், வில்கின்ஸ் பின்னர் இறந்து கிடந்த அதே டோட்டன்ஹாம் கார் பூங்காவில், மூன்றாவது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
லெவி 2025 ஆகஸ்ட் 24 அன்று வில்கின்ஸைக் கொலை செய்த நிலையில், தாங்கள் அவரை முன்னதாகவே கைது செய்திருந்தால், இந்த மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என்று மெட் பொலிஸார் நீதிமன்றில் தற்போது ஒப்புக்கொண்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் வில்கின்ஸின் தாயார் மேரி வில்கின்ஸ், தனது அறிக்கையை வாசிக்கச் சொல்லி அனுப்பியிருந்தார்.
அந்த அறிக்கையில், “ஒரு குழந்தையை இழப்பது என்பது என்ன உணர்வு என்று விவரிக்க முடியாது. நான் அவளை காதலிக்கிறேன் என்று மூன்று முறை சொன்னேன், ஏனென்றால் நாங்கள் எப்போதும் அப்படித்தான் செய்வோம். அவளும் மூன்று முறை திருப்பி சொன்னாள். ‘நாளை பேசுவோம்’ என்று சொன்னோம். ஆனால் அந்த நாள் வரவே இல்லை” என்று அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.
ஷெரிலின் சகோதரி லிண்ட்சி ஹிக்ஸ், தனது அறிக்கையை நீதிமன்றத்தில் நேரில் வாசித்தார். “இவை அனைத்தும் உன்னால் தான் சைமன் லெவி, நீ எங்களிடமிருந்து பறித்தவை. ஆனால் இதைத் தெரிந்து கொள், நீ தோற்கிறாய். நாங்கள் இங்கிருந்து வெளியேறுகிறோம். ஷெரிலின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டும், அவளுக்காக வாழ்ந்தும் அவளை உயிரோடு வைத்திருப்போம்” என்றார்.
இதன்போது, லெவி வன்கொடுமை செய்த தப்பிப்பிழைத்த பெண்ணின் அறிக்கையும் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. “என் அவமானம், நான் மீண்டும் அனுபவித்த நரகம், என் உண்மை – இது அவர்களுக்கும் ஒரு குரலைக் கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் அந்த அறிக்கையில் எழுதியிருந்தார்.