அமெரிக்கா – மசாசூசெட்ஸ் மாநிலத்தில் தனது தாய் மற்றும் தம்பியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 17 வயது சிறுவன், இந்தக் கொலைகளைத் திட்டமிடுவதற்கும் அது குறித்த கற்பனைக் கதைகளை உருவாக்குவதற்கும் சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
17 வயதான அர்ஜுன் அரவிந்த், தனது தாய் சுதா வெங்கடேசன் (வயது 45) மற்றும் 14 வயது தம்பி சித்தார்த் அரவிந்த் ஆகியோரைக் கடந்த செவ்வாயன்று அவர்களது இல்லத்திலேயே கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
வீட்டிற்கு வந்த ஆசிரியர் ஒருவரால் யாரையும் தொடர்புகொள்ள முடியாததைத் தொடர்ந்து, சிறுவனின் தந்தை பொலிஸாருக்குத் தகவல் அளித்தார்.
பொலிஸார் நடத்திய சோதனையில், தம்பி சித்தார்த்தின் உடல் வீட்டின் முதல் தளத்திலும், தாயின் உடல் அடித்தளத்திலும் (basement) கண்டெடுக்கப்பட்டது. இருவருமே பலமான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணையின் போது, அர்ஜுன் இணையம் மற்றும் சாட்ஜிபிடி மூலம் தனது குடும்பத்தினரைக் கொல்வது போன்ற கோதிக் (Gothic) நாவல் பாணியிலான கற்பனைக் கதைகளை உருவாக்கியது கண்டறியப்பட்டது.
மாவட்ட வழக்கறிஞர் மரியன் ரியான் இது குறித்து கூறுகையில், “அர்ஜுன், சாட்ஜிபிடி-யிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு, கதாபாத்திரங்களை உருவாக்கி, தனது குடும்பத்தக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய கற்பனைக் கதைகளைத் திட்டமிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
கொலைக்குப் பிறகு தனது தாயின் காரில் தப்பியோடிய அர்ஜுன், சுமார் 21 கி.மீ தொலைவில் உள்ள Wayland பகுதியில் புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டார்.
அர்ஜுன் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள், தாக்குதல் மற்றும் வாகனத் திருட்டு உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நடந்த நீதிமன்ற விசாரணையில், அவர் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் இது போன்ற குற்றச் செயல்களுக்கு உதவியாக இருப்பது குறித்து ஏற்கெனவே பல கவலைகள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.