வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களின் காணிகளையும் விடுவிப்பதற்கான தெளிவான மற்றும் காலவரையறை கொண்ட வேலைத்திட்டத்தை அரசாங்கம் உருவாக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில காணிகளை மட்டும் விடுவிப்பது போதுமானதல்ல. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களின் காணிகளையும் அரசாங்கம் அடையாளம் காண வேண்டும். ஒவ்வொரு காணியும் ஏன் இன்றும் தக்க வைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாலாலி சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் காணி விடுவிப்பு போராட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது பூர்வீக மற்றும் தனியார் காணிகளை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாலாலி சந்தியில் இடம்பெற்று வரும் போராட்டம் தற்போது தொடர்ந்து 10 வாரங்களாக நடைபெற்று வருகிறது. தங்களது காணிகளை மீளப் பெற்றுக்கொள்ளக் கோரி மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்த சாணக்கியன் இராசமாணிக்கம்,அவர்களின் போராட்டத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் ஆதரவு தொடரும் என உறுதியளித்தார்.
அரசாங்கத்தின் மீது மக்கள் பொறுமையிழந்து வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் இனி தனித்தனி சம்பவங்களாக இல்லை. பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி வடக்கு, கிழக்கு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
மக்கள் தங்களுக்குச் சொந்தமான காணிகளை மீளப் பெறுவதற்காக காலவரையறையின்றி காத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
யுத்த காலத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து அதே நிலைப்பாட்டில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால்,அதே கொள்கை இன்னமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளுக்கும் பொருந்த வேண்டும்.
யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பொதுமக்களின் காணிகளை தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்திருப்பதற்கு ‘தேசிய பாதுகாப்பு’ என்ற பொதுவான காரணத்தை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்த முடியாது.
தேசிய பாதுகாப்பு என்பது மக்கள் தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அணுகுவதற்கான உரிமையை மறுப்பதற்கான நிரந்தர காரணமாக மாறக்கூடாது.
இங்கு வந்து மக்களுடன் நேரடியாகப் பேசும்போதுதான் இது வெறுமனே அரசாங்க ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணிகளின் அளவு தொடர்பான பிரச்சினை அல்ல என்பதை புரிந்துகொள்ள முடியும். இவை மக்களின் வீடுகள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமூகங்கள். பல தசாப்தங்களாக அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இன்னமும் உள்ள அனைத்து பொதுமக்களின் காணிகளையும் விடுவிப்பதற்கான தெளிவான மற்றும் காலவரையறை கொண்ட வேலைத்திட்டத்தை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில காணிகளை மட்டும் விடுவிப்பது போதுமானதல்ல.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இன்னமும் உள்ள அனைத்து பொதுமக்களின் காணிகளையும் அரசாங்கம் அடையாளம் காண வேண்டும். ஒவ்வொரு காணியும் ஏன் இன்னமும் தக்கவைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மேலும்,அவற்றை உரிய உரிமையாளர்களிடம் மீளக் கையளிப்பதற்கான உறுதியான காலவரையறையையும் அறிவிக்க வேண்டும்.
இந்த விடயத்தை தொடர்ந்து பாராளுமன்றத்தில் எழுப்புவதுடன்,பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவேன்.
இந்த சமூகங்களுடன் நான் தொடர்ந்து நிற்பதுடன், அவர்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்புவேன். வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் அதிகரித்து வரும் மக்களின் விரக்தியை அரசாங்கம் புரிந்துகொண்டு, இந்தப் போராட்டங்கள் மேலும் பரவுவதற்கு முன்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களின் காணிகள் நீண்டகாலமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அனைத்து பொதுமக்களின் காணிகளையும் மேலும் தாமதமின்றி விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.