பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரபல வைத்தியசாலையில் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 15 பச்சிளங்குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்தில் இயங்கி வரும் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) வைத்தியசாலையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில், அப் பிரிவில் மொத்தம் 16 பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சையில் இருந்துள்ளன.
அலகில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியின் (Air Conditioner) கம்ப்ரஸர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.
கம்ப்ரஸர் வெடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே தீ அறை முழுவதற்கும் பரவியுள்ளது.
ஒரு குழந்தை மட்டுமே மீட்பு!
இந்தத் தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடித் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், அடர்ந்த புகையாலும் தீயின் தீவிரத்தாலும் அங்கிருந்த 15 பச்சிளங்குழந்தைகள் மூச்சுத்திணறியும் தீக்காயமடைந்தும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் மீட்புக் குழுவினரின் போராட்டத்துக்குப் பிறகு ஒரேயொரு குழந்தை மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிரோடு மீட்கப்பட்டது.
தற்போது அப்பகுதியில் குளிரூட்டும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இக்கொடூர விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.