தயாரிப்பு : திவ்யஷேத்ரா ஃபிலிம்ஸ்
நடிகர்கள் : ராஜன் தேஜஸ்வர், ஐரா அகர்வால், ஜார்ஜ் மரியான், சாய் தீனா, நாகி நீடு, கல்கி ராஜன் மற்றும் பலர்.
இயக்கம் : திருவருள் கிருஷ்ணன்
மதிப்பீடு : 2/5
தமிழ் திரையுலகில் ரசிகர்களின் ரசனை மாற்றத்தை துல்லியமாக அவதானித்து, புதுமுக படைப்பாளிகள் தங்களது படைப்பை அளித்து வெற்றி பெறுவதுண்டு. இது ஒவ்வொரு தசாப்தத்திலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தத் தருணத்தில் இளம் புதுமுக திறமைசாலிகள் ஒன்றிணைந்து ‘அமரம்’ எனும் பெயரில் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இது வெகுஜன பார்வையாளர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
இந்தியாவின் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் உள்ளார்ந்த கிராமப் பகுதி ஒன்றில் நாளாந்த வாழ்வியலுக்காகவே கடினமாக உழைக்கும் நிலையில் உள்ள மக்களை.. ஆதிக்க சக்திகள் தங்களுடைய சுயலாபத்திற்காக -அவர்களின் வீரத்தை வன்முறையாக பாவித்து, கூலிப்படையாக மாற்றுகின்றனர். இத்தகைய கூலிப்படை கும்பலில் பணியாற்றும் அருகன் ( ராஜன் தேஜஸ்வர்) எந்த வகையிலும் தொடர்பே இல்லாத மிகப் பெரும் அரசியல்வாதி ஒருவரை கொலை செய்கிறார். அந்த கொலையை அவரது மகள் ஷர்மிளா ( ஐரா அகர்வால்) நேரடியாக பார்த்தும், அதனை தடுக்க இயலாத நிலையில் இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தன்னுடைய தந்தையின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, அந்த கூலிப்படை கும்பல் மீது கொலை வழக்கை பதிவு செய்து, காவல்துறை விசாரணையை மேற்கொள்கிறார். தன் தந்தையை கொலை செய்த அருகனை.. கொலை செய்ய ஷர்மிளா தீர்மானிக்கிறார். இதற்காக ஆள் பலம் மற்றும் அரசாங்க அனுசரணையுடன் அந்த அடர்ந்த கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு பயணிக்கிறார். அருகனை சந்திக்கும் தருணத்தில் அரசியல் சூழ்ச்சி காரணமாக ஷர்மிளாவே சிக்கிக் கொள்கிறார்.
இத்தகைய தருணத்தில் ஷர்மிளாவை அருகன் காப்பாற்றுகிறார். எதிரிகளை விட துரோகிகளின் வீரியம் அதிகம் என்பதை உணரும் ஷர்மிளா… அருகன் மீது கருணை பார்வையை வீசினாரா? இல்லையா? என்பதும், அருகன் ஷர்மிளாவை காப்பாற்றியதன் பின்னணி என்ன? என்பது குறித்தும் விவரிப்பதுதான் இப்படத்தின் கதை.
கதை- கதை களம்- கதாபாத்திரங்கள்- ஆகியவை விரிவாகவும், நேர்த்தியாகவும் எழுதப்பட்டு.. திரை மொழியில் விவரிக்கப்பட்டிருந்தாலும்… முதல் பாதியில் கிடைத்த சில சுவாரசியமான தருணங்கள் இரண்டாம் பாதியில் இல்லை. இரண்டாம் பாதியில் திசை மாறி பயணிக்கும் திரைக்கதையே இதற்கு காரணம்.
படத்தின் தொடக்கக் காட்சி ரசிகர்களுக்கு வித்தியாசமான படைப்பை காண உள்ளோம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும்.. முதல் பாதி வரை இந்த உற்சாகம் தொடர்ந்தாலும்… இரண்டாம் பாதியில் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப திரைக்கதை பயணிப்பதால்.. சோர்வும், எரிச்சலும் எட்டிப் பார்க்கிறது. உச்சகட்ட காட்சியில் ஏதேனும் எதிர்பாராத திருப்பங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பும் ‘புஸ்’ ஆகிறது.
உரையாடல்கள் – நிலவியல் பின்னணி சார்ந்த ஒளிப்பதிவு – பின்னணி இசை- ஆகியவை இந்த குறைந்த முதலீட்டில் உருவான திரைப்படத்தின் தரத்தை உயர்த்தியே காண்பிக்கின்றன.
அருகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ராஜன் தேஜஸ்வர் கூலிப்படையில் ஒருவராக- சிக்கலான கதாபாத்திரத்தை கச்சிதமாக தன் தோளில் சுமந்து, அதற்குரிய உடல் மொழியையும் உச்சரிப்பையும் அளித்து ரசிகர்களை கவர்கிறார். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கான குரல் மட்டும் மிஸ்ஸிங்.
தானும் சாதாரணமான மக்களைப் போலவே வாழ விரும்பினாலும்… பாலியல் கொடுமைகள் நடைபெற்ற போது அதற்கு வன்முறையால் தான் எதிர்வினை ஆற்ற வேண்டும் என்ற தமக்குள் கற்பிதம் செய்யப்பட்ட உணர்வில் இருந்து மீள இயலாமல் தவிக்கும் தவிப்பு நேர்த்தி. இந்த கதாபாத்திரத்தை இன்னும் சிறப்பாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து எழுதப்பட்டிருந்தால்… இந்தப் படைப்பு கொண்டாடப்பட்டிருக்கும்.
ஷர்மிளா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐரா அகர்வாலின் கண்கள் – சில விடயங்களை பார்வையாளர்களுக்கு கடத்தினாலும்… உடல் மொழியும், திரை தோற்றமும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருக்கிறது.
ஜார்ஜ் மரியான் -சாய் தீனா- நாகி நீடு- ஆகியோரின் கதாபாத்திரங்கள் வழக்கமானவை. இதில் சாய் தீனா கதாபாத்திரம் மட்டும் சற்று கவனம் ஈர்க்கிறது.
ஹரிஷ் பெராடி கதாபாத்திரம் திரைக்கதையின் பலவீனம் என்றே குறிப்பிடலாம்.
அமரம்- ஒலி எழுப்பாத டமாரம்