எட்டி எட்டி பார்த்தும்
எட்ட முடியா பழமாய்
இன்னும் இப்பூமியில்
ஏழை வாழ்வு அல்லாடுகிறது
வாட்டி எடுக்கும் வடுக்கள் கொடுத்தவலி
மாற மறுக்கிறது
கொடுத்து பழகிய கை ஏற்க மறுக்கிறது
கொடுமை பசி பலர் உயிரைக் எடுக்கிறது…..
ஆசையில காசு வாங்கி ஆடம்பர செலவு செய்து
பேச கூட நேரமின்றி அலையும் கூட்டம் ஒருபுறம்
பாசமா பெத்த புள்ள
பாதி வயிறு சோறுண்டு பத்தாம பார்க்கும் பார்வையை
பார்த்து தலைகவிழ்ந்து
தன்னை தானே நொந்து கொள்பவர் மறுபுறம்….
ஆயிரத்துக்கு எல்லா பொருளும் வாங்கி
ஏற்றமான வாழ்வு வாழ்ந்த காலம் போய்
ஆயிரங்கணக்கில் சம்பளம் பெற்றாலும்
அரைபொருள் கூட வாங்க முடியா காலம்
மனிதர்களை அல்லோலப்படுத்தும் பாட்டை யார் கேட்பார்…
எத்தனை மேடை எத்தனை சத்தியம்
இன்னும் சாமானியர்களுக்கு மட்டும்
ஏன் இந்த விதிவிலக்கு வறுமைச் சட்டம்
எத்தனை கற்பனை கொண்டு மனிதன் வாழ வருகிறான்
அத்தனையும் அலையில் கரையும் மணல்வீடுகளாய்
ஆகுவதை யாரால் தான் தடுத்து நிறுத்த முடியுமோ…..
கவிதை | பா.க்ரிஷானி | ஒரு துளி