‘அசுரன்’ திரைப்படம் பற்றி ‘வெக்கை’ நாவலாசிரியர் பூமணியிடம் பேசினோம். இந்த நாவலே, அப்படத்தின் மூலக்கதை.
பூமணி, தமிழின் மூத்த எழுத்தாளர். சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இவர் எழுதிய ‘வெக்கை’, ‘பிறகு’, ‘அஞ்ஞாடி’ உள்ளிட்ட நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றன. `கருவேலம் பூக்கள்’ என்ற திரைப்படத்தையும் அவர் இயக்கியுள்ளார். தன் நாவல் படமாகியிருப்பது குறித்து அவரின் கருத்தை அறிய அவரைத் தொடர்புகொண்டோம்.
“தமிழ் சினிமாவில் நாவல்களைத் தழுவிப் படமெடுப்பது ஆரோக்கியமான விஷயமாகத்தான் பார்க்கிறேன். நான், நேற்று படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எந்த எழுத்தாளருக்குமே தனது நாவல் திரைப்படமாகும்போது, அதைப் பார்க்க ஆவலாகத்தான் இருக்கும். எனது நாவலில் திருத்தம் செய்துதான் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முயற்சிகள் தமிழ் சினிமாவில் நிகழ்வது, மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.