Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பேன் | விஷ்ணு விஷால்

தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பேன் | விஷ்ணு விஷால்

2 minutes read

‘கட்டா குஸ்தி போன்ற நகைச்சுவைக்கும், இன்றைய சமூகத்திற்கு தேவையான கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்” என விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரித்து, அண்மையில் வெளியான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’.

இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதையின் நாயகியாக நடித்தார். விஷ்ணு விஷால் அவரது கணவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பேராதரவை பெற்று வருகிறது. இதற்கு ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்  படக்குழுவினர் விழா ஒன்றினை சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்நிகழ்வில் படக் குழுவினர் பங்கு பற்றி தங்களது நன்றியை தெரிவித்தனர்.

இதன் போது பேசிய விஷ்ணு விஷால், ” கொரோனா காலகட்டத்தின்போது இயக்குநர் செல்லா எம்மை சந்தித்து இக்கதையை விவரித்தார். இக்கதையில் நான் கதாநாயகன் இல்லை என்று தெரிந்திருந்தும், கதையில் நாயகிக்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது என்று தெரிந்தும், இந்த கதை ஆண்- பெண் சமம் என்பதை பேசுவதாலும், திருமணமான பிறகும் பெண்களின் எண்ணங்களுக்கு அவரது கணவர்கள் உந்து சக்தியாக திகழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதாலும், இந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.

மேலும்  கொமடியும் கன்டென்ட்டும் நன்றாக இருந்ததால் தயாரிக்க தொடங்கினேன். இந்தத் திரைப்படம் வெளியான முதல் நாளை விட இரண்டாவது நாளில் கூடுதல் வசூலை பெற்றது. இரண்டாவது நாளை விட மூன்றாவது நாளில் வசூல் மடங்கு உயர்ந்தது. ‘கட்டாகுஸ்தி’ திரைப்படம் மூன்று நாட்களில் 30 கோடி ரூபா வசூலித்ததாக திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இது எமக்கு உற்சாகத்தையும், தொடர்ந்து இது போன்ற படங்களை தயாரிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் அளித்திருக்கிறது. நகைச்சுவைக்கும் இது போன்ற சமூகத்துக்கு தேவையான கருத்தினை கொண்ட படங்களையும் தொடர்ந்து தயாரிப்பேன்” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், ”முதலில் இந்த கதையை இயக்குநர் எம்மிடம் தெரிவித்த போது, இதற்கு நான் பொருத்தமாக இருப்பேனா..! என்ற தயக்கம் இருந்தது. அதனால் ஏற்றுக் கொள்ள மறுத்தேன். பிறகு சில வாரங்கள் கழித்து மீண்டும் இந்த வாய்ப்பு எம்மைத் தேடி வந்தது. முயற்சி செய்து பார்ப்போமே..!  என எண்ணி நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இதன் பிறகு இயக்குநரின் வேண்டுகோளுக்கிணங்க மல்யுத்த தற்காப்பு கலை பயிற்சியாளரிடம் பத்து நாட்கள் பயிற்சி பெற்றேன். அதன் பிறகு நடித்தேன். இந்தப் படத்தில் எனது கணவராக நடித்த நடிகர் விஷ்ணு விஷாலை இப்படத்தின் தயாரிப்பாளர் என்று தெரிந்தும், காட்சியின் தன்மைக்காக நிஜமாகவே தாக்கினேன். இப்படத்தில் வெற்றிக்கு நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்ட அனைவரும் அளித்த ஒத்துழைப்பு தான் காரணம்” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More