செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா எக்ஸாம் | இணைய தொடர் விமர்சனம்

எக்ஸாம் | இணைய தொடர் விமர்சனம்

2 minutes read

தயாரிப்பு : வால் வாட்சர் பிலிம்ஸ்

டிஜிட்டல் தளம்: பிரைம் வீடியோ

வெளியீட்டு திகதி:  15 – 05- 2026

நடிகர்கள் : துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ், நரேன் மணி, துரை சுதாகர் மற்றும் பலர்.

இயக்கம் : ஏ. சற்குணம்

மதிப்பீடு : 3 / 5

அரசாங்க உயர் பதவிகளுக்கான போட்டி எழுத்து தேர்வில் நடைபெறும் முறைகேட்டின் பின்னணியில் பரபரப்பான திரில்லர் ஜேனரில் ஏழு அத்தியாயங்களாக உருவாகி இருக்கும் அசல் இணைய தொடர் என்பதாலும்… துஷாரா விஜயன்- அதிதி பாலன்- அப்பாஸ்- ஏ. சற்குணம் – புஷ்கர் & காயத்ரி – சாம் சி எஸ் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருப்பதாலும்… ‘எக்ஸாம்’ இணைய தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த தொடர் நிறைவேற்றியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

உதகம் மலை எனும் பகுதியில் உள்ள தைக்காரா எனும் இடத்திற்கு காவல்துறை உயரதிகாரியாக பொறுப்பேற்கிறார் மரமல்லி ( அதிதி பாலன்) எனும் பெண் காவல்துறை அதிகாரி. இவர் பொறுப்பேற்பதற்காக வரும் வழியில் ஜான்சி ( துஷாரா விஜயன்) எனும் பெண்ணால் கடத்தப்படுகிறார்.

அதன் பிறகு ஜான்சி மரமல்லி என்ற காவல்துறை அதிகாரியாக தைக்காராவில் பொறுப்பேற்கிறார். இந்த நிலையில் அரசாங்கம் நடத்தும் உயர் அதிகாரிகள் பணிகளுக்கான போட்டி எழுத்து தேர்வு தைக்காராவில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெறுகிறது. அத்துடன் இந்த தேர்வு மையத்தில் முறைகேடு நடக்கவிருப்பதாக ரகசிய தகவல்கள் வெளியாகிறது. இந்த முறைகேட்டிற்கு காவல்துறை அதிகாரியான மரமல்லி உடந்தையாக இருப்பதால்..

அவரை கடத்தி வைத்துவிட்டு, அவருக்கு பதிலாக ஜான்சி மரமல்லியாக ஆள் மாறாட்டம் செய்து பணியாற்றத் தொடங்குகிறார். தேர்வு நடைபெறுவதற்கு பத்து நாட்கள் முன்னதாக ஜான்சி இந்த முறைகேட்டின் பின்னணியில் உள்ள சதி வலையை விசாரிக்க தொடங்குகிறார்.

அவருடைய  விசாரணையில் குற்றவாளியை கண்டறிந்தாரா? இல்லையா? என்பதும்.. ஜான்சி போலியான மரமல்லி என்பதை காவல்துறையினர் எந்த தருணத்தில் கண்டுபிடிக்கிறார்கள் என்பதும்… முறைகேட்டில் ஈடுபடுவதால் கடினமாக உழைத்து இந்த தேர்வினை எழுதி தங்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் ஏழை எளியவர்களின் கனவு என்ன ஆனது என்பது குறித்தும்.. இந்த இணைய தொடர் விவரிக்கிறது.

ஏழு அத்தியாயங்களாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இணைய தொடரின் முதல் மூன்று அத்தியாயங்கள் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் படபடக்க வைக்கிறது. அடுத்து என்ன நடக்குமோ..!? என்ற பதற்றம் பார்வையாளர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது. நான்கு -ஐந்து- ஆறு- ஆகிய மூன்று அத்தியாயங்களில் சுவராஸ்யம் குறைவு என்றாலும் ..சோர்வு தட்டாமல் அடுத்து என்ன நடக்கும் என்பதை யோசிக்க வைக்கிறது. ஆனால் இறுதி அத்தியாயத்தில் அரசாங்க ஊழியர்களுக்கான எழுத்துத் தேர்வில் நடைபெறும் மோசடிகள்… அதன் பின்னணி… குற்றவாளிகள் யார்?..ஆகியவற்றை விவரிக்கும் போது பார்வையாளர்களுக்கு உண்மையிலேயே மனதிற்கு நிறைவான அனுபவம் கிடைக்கிறது.

அதற்காக குறைகள் இல்லாமல் இல்லை. காவல்துறையின் உயர் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்வது என்பது எளிதானதா? என்பதுதான் முதன்மையான கேள்வியாக எழும். ஆனால் இந்தக் குறைகள் அனைத்தும் படைப்புக்கான படைப்பாளியின் சுதந்திரம் என்ற எல்லைக்குள் இருப்பதால் பெரிதாக பாதிக்கவில்லை.

உச்சக்கட்ட காட்சியில் ஜான்சி  கதாபாத்திரமும், குமரேசன் கதாபாத்திரமும் வினா -விடை பாணியில் நிகழ்த்தும் உரையாடல்… ரசிகர்களை குறிப்பாக மெத்த படித்த ரசிகர்களை கவர்கிறது.

இந்தியாவில் பல இடங்களில் அரசாங்க பணிகளுக்காக அரசு நடத்தும் போட்டி எழுத்து தேர்வில் நடைபெற்ற உண்மையான முறைகேடு – மோசடி ஆகியவற்றை தழுவி தொடர் எழுதப்பட்டிருப்பது இதன் தனித்துவமான சிறப்பம்சமாகும்.

தொடர் முழுவதும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கதாசிரியர்கள் சிறப்பாக வடிவமைத்து அதற்கான எழுத்தை நேர்த்தியாக எழுதியிருக்கிறார்கள். இவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அருண் அமரேந்திரனின் ஒளிப்பதிவும்.. ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பும் …சாம் சி எஸ் இன் பின்னணி இசையும் அமைந்திருக்கிறது.

ஏழு அத்தியாயங்களையும் இணைத்து மொத்தமாக 226 நிமிடங்களில் சொல்லப்பட்டிருந்தாலும்.. பெரும்பாலான தருணங்கள் டிஜிட்டல் தள பார்வையாளர்களுக்கு அற்புதமான  அனுபவத்தை  வழங்கியது.

காவல்துறை அதிகாரி ஒருவரை கடத்தி வைத்துவிட்டு அவருடைய இடத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பணியாற்றுகிறார் என்றால்.. நிச்சயமாக அவருக்கு ஒரு அழுத்தமான பின்னணி இருக்க வேண்டும். அதனை சிறை துறையில் அதிகாரியாக பணியாற்றிய ஜெயச்சந்திரன்( அப்பாஸ்)  என்பவர் உதவி செய்வதும்.. இந்த மோசடி அதாவது வினாத்தாள் கசிவு எப்படி நடைபெறுகிறது? என்பது தொடர்பான காட்சிகளும், திரைமொழியும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜான்சி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துஷாரா விஜயன்-  மரமல்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிதி பாலன்- ஜெயச்சந்திரன் எனும் சிறைத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அப்பாஸ் ஆகியோரை கடந்து மலைவாழ் மக்களிடம் தேநீர் இலவச பயிற்சி பள்ளியை நடத்தும் குமரேசன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் நரேன் மணி ஆகியோர் தங்களது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்கின்றனர்.

இணையத் தொடரின் முதல் காட்சியும்.. குற்றவாளியின் நிறைவு காட்சியும் ஒன்றுடன் ஒன்று இணைத்திருப்பது இயக்குநரின் தனித்திறமையை பறைசாற்றுகிறது. இணையத் தொடர் அரசு பணிக்கான எழுத்துத் தேர்வின் நடைபெறும் மோசடியை விவரிப்பதாக இருந்தாலும்.. இதனூடாக தமிழ் கலாச்சாரத்தின் மரபுகள் அழுத்தமாக இடம் பிடித்திருப்பது பாராட்டத்தக்கது.

எக்ஸாம் –  ஸ்வீட் ஜாம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.