செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன | ஞானசார தேரர் குற்றச்சாட்டு

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன | ஞானசார தேரர் குற்றச்சாட்டு

3 minutes read

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த இஸ்லாமிய தீவிரவாதத்தின் உண்மையான வேர்கள் இன்னும் நாட்டுக்குள் செயற்பட்டு வருவகின்றன. சஹ்ரான் ஹாசிமை உருவாக்கிய சிந்தனை மற்றும் கொள்கை அடித்தளங்கள் அழிக்கப்படாமல் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை, அதனைச் சுற்றியுள்ள அரசியல் விவாதங்கள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இந்த விவகாரம் குறித்து நாம் இன்று பேசத் தொடங்கவில்லை. பல வருடங்களாக தொடர்ந்து எச்சரித்து வருகின்றோம். இந்த விடயங்களைப் பற்றி பேசச் சென்ற காரணத்தினால் பல தடவைகள் அசௌகரியங்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றோம். அன்றைய தினங்களில் நாம் மிகுந்த வேதனையுடன் கூறிய விடயங்களையே இன்றும் அதே வேதனையுடன் கூறுகின்றோம்.

ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் நியமனம் தொடர்பில் நான் நல்லது என்றும் கூறப் போவதில்லை, கெட்டது என்றும் கூறப் போவதில்லை.

அரசாங்கங்கள் தங்களுடைய அரசியல் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு நியமனங்களை மேற்கொள்வது வழக்கமான விடயமாகும். ஆனால் இன்று நாட்டில் நடைபெறுகின்ற விவாதம் உண்மையை நோக்கியதல்ல.

ஒரு தரப்பு ஒரு பக்கத்திலும் மற்றொரு தரப்பு மறுபக்கத்திலும் நின்று அரசியல் மோதலில் ஈடுபட்டுள்ளன. இதன் மத்தியில் உண்மையான பிரச்சினை புதைக்கப்பட்டு வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான தீவிரவாத வலையமைப்புகள், அவற்றின் சிந்தனை அடித்தளங்கள் மற்றும் அவற்றை உருவாக்கிய அமைப்புகள் குறித்து எவரும் பேசுவதில்லை. அதற்கு பதிலாக மகா சூத்திரதாரி என்ற ஒரே கதையை மையப்படுத்தி புதிய அரசியல் விவாதங்கள் உருவாக்கப்படுகின்றன.

பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட சிலர், கர்தினால் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நியமனங்கள் இடம்பெற்றுள்ளன என்று கூறுகின்றனர். கடந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக கர்தினால் ஆண்டகை தீவிரமாகச் செயற்பட்டார். அப்போது அவர் நாடு, இனம் மற்றும் கலாசாரம் குறித்து அதிகமாகப் பேசினார்.

அதன் பின்னர் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. தற்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துடனும் சில உடன்பாடுகள் காணப்படுவதாகத் தோன்றுகின்றது. ஆனால் எமது நிலைப்பாடு மாறவில்லை. உண்மையைச் சொன்னதற்காக திட்டுக்களும் அச்சுறுத்தல்களும் வந்தாலும் அதைத் தொடர்ந்தும் கூறுவோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெறுவதற்கு சுமார் ஒரு வருடத்துக்கு முன்னரே அன்றைய அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நான் நேரில் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் திலந்த விதானகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

உலகளாவிய பயங்கரவாத வலையமைப்புகளின் ஆபத்தான கிளைகள் இலங்கைக்குள் வேரூன்றத் தொடங்கியுள்ளன என்றும், குறிப்பாக நீர்கொழும்பு உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளை மையமாகக் கொண்டு சில குழுக்கள் ஒன்றுகூடி வருகின்றன என்றும் அப்போது எச்சரித்தேன்.

பேலியகொட முதல் சிலாபம் வரையிலான பகுதிகளில் உள்ள கத்தோலிக்க மதகுருமார்களை ஒன்று திரட்டித் தருமாறும், எம்மிடம் இருந்த தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.

ஏனெனில் இந்த தீவிரவாத முகாம்கள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன, அவற்றுக்கான நிதி எவ்வாறு கிடைக்கின்றது, நிலங்கள் எவ்வாறு கொள்வனவு செய்யப்படுகின்றன என்பன தொடர்பில் எமக்கு தகவல்கள் இருந்தன.

இலங்கை முழுவதையும் ஒரு கலிபா ஆட்சியாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் செயற்பட்ட குழுக்கள் உருவாகி வருவதாக அப்போது எச்சரித்தோம். ஆனால் எமது எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. அன்றைய காலத்தில் எமது குரலுக்கு செவிசாய்க்கப்பட்டிருந்தால் உயிரிழந்த 300 பேரில் பலர் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள்.

நான் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானவன் அல்ல. சாதாரண முஸ்லிம் மக்களை எதிர்ப்பதும் இல்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்துக்குள் உருவாகி, ஊக்குவிக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத சிந்தனைகளுக்கே நாம் எதிராக இருக்கின்றோம்.

அன்றைய காலத்தில் இதனைப் பற்றி நாம் பேசும்போது பல தரப்பினர் எம்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ராஜபக்ஷ தரப்பின் அரசியல் திட்டத்துக்காக செயற்படுகின்றோம் என்றும் கூறினார்கள். ஆனால் இன்று நாம் எச்சரித்த ஆபத்துகள் அனைத்தும் வெளிப்படையாகத் தெரிய வருகின்றன.

சஹ்ரான் ஒரே நாளில் உருவாகவில்லை. அவர் ஆரம்ப காலத்தில் காத்தான்குடியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் 40 தடவைகளுக்கும் அதிகமான முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதன் விளைவாகவே நாடு பின்னர் பேரழிவை எதிர்கொள்ள நேரிட்டது.

இன்று மீண்டும் அதே தவறைச் செய்யக் கூடாது. கடந்த காலத்தில் மாவனல்லையில் இவ்வாறான கருத்தியல் பயிற்சிகளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது எதிர்வரும் 13 ஆம் திகதி புத்தளம் பகுதியில் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் கற்கும் மாணவர்களை இலக்காகக் கொண்டு தனித்துவமான பயிற்சி முகாம்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய சிலர் இன்னும் வெளிப்படையாகச் செயற்பட்டு வருகின்றனர். இளைஞர்களை ஜிஹாத் பாதைக்கு வழிநடத்தியவர்கள் இன்னும் தங்களுடைய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகம் முழுவதையும் ஷரியா சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனைகளைப் பரப்பிய குழுக்கள் இன்னும் செயற்பட்டு வருகின்றன.

இந்த நிலைமை குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர், சபாநாயகர் மற்றும் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்து விளக்கமளிக்க நேரம் கோரியிருந்தேன். ஆனால் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. ஆனால் சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைப் பாடசாலைகள் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதே எனது கவலையாகும்.

தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே இஸ்லாமி, இக்வானுல் முஸ்லிமீன், தப்லிக் ஜமாத், வஹாபிசம் மற்றும் சலபிசம் போன்ற சிந்தனைகள் குறித்து பாதுகாப்புத் தரப்பினருக்கு விளக்கத் தயாராக இருக்கின்றேன்.

நான் பேசுவது வெளிப்படையான தீவிரவாதிகளைப் பற்றி அல்ல. மாறாக ஜனநாயக அமைப்புகளுக்குள் ஊடுருவி செயற்படும் நவீன ஸ்மார்ட் சலபிசம் சிந்தனை வலையமைப்புகள் பற்றியே எச்சரிக்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 300 பேருக்கு நாம் செய்யக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலி, எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவு மீண்டும் நடைபெறாமல் தடுப்பதே ஆகும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.