மனிதம் கருகிய நாள்
ரத்தம் நனைத்த தினம்
கண்ணீர் பெருக்கெடுத்த நிலத்தின்
கனவுகள் சிதைந்தழிந்த தமிழினத்தின்
வார்த்தைகள் ஒழிந்தே காலத்தின் குரல்வளை நெரிபட்ட ஓலங்கள்
துரோக வரலாற்றை எழுதி காற்றின் முகத்தில்
விசிறியடிக்கிறது
மனிதர்கள் இந்த பூமியில் வாழ்வது ஏனென்று ?
அலைகளின் கொந்தளிப்பில் நீளும் கூக்குரல்கள்
இனப்படுகொலைகளின் வெறியாட்டங்களை
அலறி நொடி தோறும் சொல்லிக் கொண்டிருக்கின்றன
எரிந்த தீயில் கரிந்த பிணங்களின் வீச்சம்
பிரபஞ்சத்தின் வெளிகளில் அழியாத கறையாக படர்ந்து கொண்டிருக்கிறது
அடைமழையில் வெப்ப பெருமூச்சு விடும்
அதன் ஒவ்வொரு மணல்துகள்களும்
யாவற்றையும் வேடிக்கை பார்த்த புத்தன் அனாதைச் சடலமாய் அழுகிக்கிடக்கிறான்
தலைவிரிகோலமாய் நெருப்பு கனியும் விழிகளோடு பெண்ணொருத்தி
செங்காந்தள் மலர் மாலையணிந்த பெண்ணொருத்தி
பனங்கருக்கில் வாள் செய்கிறாள்
பழிதீர்க்கும் நாளுக்காக.
வசந்ததீபன்