எங்கள் இசைஉலகின் பெருந்தவமான பேராசான் சங்கீத வித்துவான் ஏ,கே.கருணாகரன் அவர்களின் பிரிவு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும் என்று முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
“கர்நாடக இசையின் எல்லைகளைத்தொட்டு நிறைந்த இசை ஞானத்துடன் எங்கள் பண்பாட்டுக்கு பெருமை சேர்ந்தவர் திரு கருணாகரன் அவர்கள். தந்தை வழியான இசைநாடக பாரம்பரிய ஆற்றலுடன் தமிழகத்தின் இசைக்கலை பேராளுமைகளிடம் முறையான கல்வியை கற்று எங்கள் தேசத்து இசைக்கலை வளர்ச்சியில் தனித்துவமாய் பணியாற்றியவர் ;எங்கள் பல்கலைக்கழகத்து இராமநாதன் நுண்கலைக்கழகம் ,இலங்கை வானொலி,ஆலாபனா -இசை மேம்பாட்டுக்கான செயற்பாட்டு நிறுவனம் என அவரது பணிக்களங்கள் விரிந்தவை. அவருடன் பழகிய ,அவர் பணிகளில் நெருங்கி செயற்பட்டபொழுதுகளும் ,அவரிடம் பாடம் கேட்க வாய்த்த பெரும் பேறும் என்றென்றும் நெஞ்சிலே போற்றிக்காக்கப்படுவன.
ஈடுசெய்யமுடியாத பேரிழப்பில் தவிக்கும் அவர் குடும்பத்தினருடனும் இசை உலக உறவுகளுடனும் என் ஆத்ம அஞ்சலியை காணிக்கை ஆக்குகின்றேன்…” என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.