முதுகு வலிக்குப் பல காரணங் கள் சொல்லப்பட்டாலும், அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று, இடைவட்டு விலகுவது (Disc prolapse). அடுத்தது, முதுகு முள்ளெலும்புகளின் (Vertebrae) பின்புறமுள்ள அசையும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது. இந்தக் காரணங்களால் தண்டுவட நரம்பு செல்லும் பாதை குறுகிவிடுகிறது. இதனால் தண்டுவட நரம்பு அழுத்தப்படுகிறது. இதைச் சுற்றியுள்ள ரத்தக் குழாய்கள் நெரிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்து நரம்பு முறையாக இயங்க வழி இல்லாமல், வலி ஏற்படுகிறது. பொதுவாக, காலுக்கு வரும் சியாட்டிக் நரம்பு இவ்வாறு பாதிக்கப்படும். இதனால்தான் இதற்கு ‘சியாட்டிகா’(Sciatica) என்று பெயர் வந்தது.
ஆரம்பத்தில் இந்த வலியானது, அவ்வப்போது கீழ் முதுகில் ஏற்படும். பெரும்பாலானோர் இதை வாய்வு வலி என்று தாங்களாகவே தீர்மானித்துக்கொண்டு, சிகிச்சை செய்யாமல் இருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் இந்த வலி கடுமையாகித் தொடைக்குப் பின்புறத்திலோ, காலுக்கோ மின்சாரம் பாய்வதைப்போல ‘சுரீர்’ என்று பரவும். படுத்து உறங்கும்போது இந்த வலி குறைந்து, பிறகு நடக்கும்போது வலி அதிகமாகும். கால் குடைச்சல் தூக்கத்தைக் கெடுக்கும். காலில் உணர்ச்சி குறையும். நாளாக ஆக மரத்துப்போன உணர்வும் ஏற்படும். முதுகைப் பின்னாலோ, முன்னாலோ வளைப்பதில் சிரமம் உண்டாகும். பலமாகத் தும்மினாலோ சிறுநீர் / மலம் கழிக்க முக்கினாலோ வலி கடுமையாகும்.