நாட்டை பிளவடையச் செய்வதற்கு இடமளிக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
‘வெற்றிகரமான நோக்கு – உழைக்கும் நாடு’ என்ற தொனிப் பொருளில் மாத்தறை, தெவிநுவரவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் 13 நிபந்தனைகளை முன்வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் அந்த நிபந்தனைகள் எமக்கு இது வரையில் கிடைக்கவில்லை.
தமிழ் பத்திரிகைகளில் வெளியாகியிருந்த செய்திகள் மூலமாகவே அறியக்கிடைத்தது. எனினும் அவற்றை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் எனக்கு இல்லை.
காரணம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு நிபந்தனைக்கும் கட்டுப்படுவதற்கு நாம் தயாராக இல்லை என்பதை தெளிவாகக் கூறுகின்றேன். எமக்கு நாடு என்பது மிக முக்கியமானது. அதனை பிளவடையச் செய்வதற்கு இடமளிக்க முடியாது. நாட்டின் தனித்துவத்தை பாதுகாப்பதற்காக பாடுபடுவதற்கு நாம் தயாரா இருக்கின்றோம்” என்று கூறினார்.