செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மக்கள் மடையர்கள் அல்லர்! – மஹிந்த விளாசல்

மக்கள் மடையர்கள் அல்லர்! – மஹிந்த விளாசல்

2 minutes read

“நாட்டின் வளங்களை அழித்த ஜே.வி.பியினருக்கு அதிகாரத்தை வழங்கும் அளவுக்கு மக்கள் மடையர்கள் அல்லர்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொனராகலை மாவட்டக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நிரூபிக்க முடியாதவற்றை வெளியிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் எதிர்க்கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர்.

கட்சி என்ற ரீதியில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம். எனினும், சேறுபூசும் செயற்பாடுகளுக்கு நாம் எதிரானவர்கள்.

கிராமப்புற மக்கள் எப்போதுமே எம்முடன் உள்ளார்கள். எதிர்வரும் தேர்தலிலும் அனைத்து மக்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதி செய்வார்கள்.

எமது அரசின் ஆட்சிக் காலத்தில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் அபிவிருத்திகள் இடம்பெற்றன. நெடுஞ்சாலைகள் மட்டுமன்றி கிராமிய வீதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு காபர்ட் போடப்பட்டன. அப்போது எதிர்க்கட்சிகள் காபர்ட் வீதியைச் சாப்பிடுவதா? எனக் கேட்டார்கள். எனினும், தற்போது கிராமிய மக்கள் அவர்களின் விவசாய உற்பத்தியைச் சந்தைப்படுத்துவதற்கு அந்த வீதிகள் பெரும் உபயோகமாகக் காணப்படுகின்றன.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் மொனராகலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் காணப்படவில்லை. எனினும், அந்த மாவட்டத்திற்கு 96 வீதமான மின்சாரத்தை எமது காலத்திலேயே நாம் வழங்கினோம்.

கிராமிய பாடசாலைகளுக்கான வசதிகளையும் மனித வளங்களையும் நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். மொனராகலை வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்தி அனைத்து வசதிகளையும் நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம். முதல் தடவையாக மொனராகலை மாவட்டத்துக்கு நீச்சல் தடாகத்தையும் நாமே பெற்றுக் கொடுத்தோம்.

தற்போது கிராமிய மட்ட விவசாயத் துறையில் சற்று பின்னடைவு காணப்படுகின்றது. அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. படிப்படியாக விவசாய நடவடிக்கைகளுக்கு நிவாரணங்களை வழங்கி விவசாயிகளின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

மக்கள் விடுதலை முன்னணியினர் கிராமம் கிராமமாக சென்று நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனத் தெரிவித்து வருகின்றனர். எனினும் 1971, 1988 மற்றும் 1989 காலங்களில் நாட்டின் வளங்களை அழித்தது அவர்களே. அவ்வாறான கட்சிக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் அளவுக்கு மக்கள் மடையர்கள் அல்லர்” – என்றார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More