June 8, 2023 5:09 am

ரவீந்திரநாத் கடத்திக் கொலை: பிள்ளையானுக்குத் தொடர்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கும் மட்டக்களப்பில் தற்போது இராஜாங்க அமைச்சராக இருப்பவருக்கும் இடையில் தொடர்பிருந்ததாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் காணி ஆணையாளர் நே.விமல்ராஜ் குற்றஞ்சாட்டினார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவராக தான் இருந்த போதே முன்னாள் உபவேந்தர் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டதாகவும், அக்காலத்தில் தற்போது மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சராகயிருந்தவர் தொடர்புபட்டது குறித்து பல்கலைக்கழகத்தில் பேசப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சட்டத்துக்கு முரணான வகையில் காணி கோரி என் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. அதனைக் கவனத்தில் கொள்ளாத நிலையிலேயே என்னைப் பழிவாங்கும் செயற்பாடுகளை குறித்த இராஜாங்க முன்னெடுத்துள்ளார்.

தனது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் என்னும் பதவியைப் பயன்படுத்தி தவறான செயற்பாடுகளையும் அரச அதிகாரிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளையுமே அவர் முன்னெடுத்து வருகின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் விசேட தேவையுடையவர்களின் தொழில் மேம்பாட்டுக்காக உரிய சட்டதிட்டங்களுக்கு அமைய காணியைப் பெற்று தொழில் முயற்சியை முன்னெடுத்த நிலையில் குறித்த காணியை அவருக்கு வழங்க வேண்டாம் எனவும், குறித்த காணியை மீளப்பெறுமாறும் எனக்கு இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) அழுத்தங்களை வழங்கினார்” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்