May 31, 2023 6:05 pm

தமிழ் எம்.பிக்கள் அரங்கம் அமைக்க மனோ அழைப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் ஒன்றை நாடாளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த. சித்தார்த்தன் எம்.பி., தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி. ஆகியோருக்கு மின்னஞ்சல் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர்கள் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான பழனி திகாம்பரம் எம்.பி., வே. இராதாகிருஷ்ணன் எம்.பி. ஆகியோரின் உடன்பாட்டுடன் இந்த அழைப்பை த.மு.கூ. தலைவர் மனோ கணேசன் எம்.பி. விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்.பி. ஊடகங்களிடம் கூறியதாவது:-

“முதற்கட்டமாக மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சித்தார்த்தன் எம்.பி., சிவி.விக்னேஸ்வரன் எம்.பி. ஆகியோருக்கு அவர்களது கட்சிப் பதவிகளை விளித்து இந்த அழைப்பை விடுத்துள்ளேன். தொலைபேசியிலும் உரையாடியுள்ளேன்.

எமது கூட்டணியின் தலைமைக் குழு உறுப்பினர்களான பழனி திகாம்பரம் எம்.பி., வே. இராதாகிருஷ்ணன் எம்.பி. ஆகியோரிடமும் உரையாடி உள்ளேன்.

எனது நோக்கம், இலங்கை நாடாளுமன்றத்தில், தமிழ் நாடாளுமன்ற அரங்கம் என்ற அமைப்பை உருவாக்குவதாகும்.

இது பற்றி நான் பல்லாண்டுகளுக்கு முன்பே கலந்துரையாடியுள்ளேன். எனினும் அன்று நிலவிய அரசியல் சூழல் காரணமாக அது அன்று சாத்தியமாகவில்லை. இன்று அதற்கான சாதகமான அரசியல் சூழல் உருவாகி வருகின்றது என நினைக்கின்றேன்.

இது பற்றி கொழும்பில் வாழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியையும் சந்தித்து உரையாட முடிவு செய்துள்ளேன்.

நம் நாடு இன்று சந்தித்துள்ள தேசிய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வைத் தேட இலங்கை அரசும், அதற்குத் துணையாக சர்வதேச சமூகமும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்த முயற்சிகளை வரவேற்கும் அதேவேளை, பொருளாதார மீட்சியுடன் நின்று விடாமல், தேசிய நெருக்கடிக்கு மூலகாரணமான தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தேடலும், இதனுடன் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் ஈழத்தமிழ் சகோதரர்களின் தனித்துவ அரசியல் அபிலாஷைகளையும், தென்னிலங்கையில் வாழும் மலையக தமிழ் மக்களின் தனித்துவ அரசியல் அபிலாஷைகளையும் அடிப்படையாகக் கொண்டு, இலங்கை அரசுடன் அரசியல் பேச்சுகளை தனித்தனியாக முன்னெடுக்க, அவ்வந்த மக்களின் ஆணையைப் பெற்ற அரசியல் கட்சிகளின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

அரசியல் தீர்வு பேச்சுகளை, தமிழ் நாடாளுமன்ற அரங்கத்தின் மூலம் முன்னெடுக்கும் நோக்கம் எனக்குக் கிடையாது.

இலங்கை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் இன்று அன்றாடம் எதிர்கொள்ளும் சமகால நெருக்கடி பிரச்சினைகளையும், தேசிய இனப்பிரச்சினைக்குக் காணப்படக்கூடிய தீர்வு எதுவாக இருந்தாலும், அவற்றுக்கான முதன்மை தேவையாக, “இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு” என்ற அடிப்படை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதையும், அனைத்துப் பெரும்பான்மை தேசிய கட்சிகளுக்கும் நேரடியாக அறிவிக்கவும், சிங்கள சகோதர பெருந்திரளினருக்கு, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் அரசியல் கட்சிகளைத் தாண்டி, நேரடியாக விளக்கமளிக்கவும், இவை தொடர்பான எமது கூட்டு செய்தியை சர்வதேச சமூகத்துக்கும், இலங்கை அபிவிருத்தி பங்காளர்களுக்கும் தெரிவிக்கவும் தமிழ் நாடாளுமன்ற அரங்கம் முன்முயற்சிகளை எடுக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

இந்த முயற்சியில் இன்னமும் பல தமிழ் கட்சிகளை இணைத்துக்கொள்ள வேண்டும், முஸ்லிம் சகோதரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் ஆகிய யோசனைகள் இருக்கின்றன.

அவற்றை எதிர்காலத்தில் கவனிக்க வேண்டும் என விரும்புகின்றேன். தற்போது அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் கட்சிகளின் தலைவர்களது அதிகாரபூர்வ பதில்களை அடுத்தே இது தொடர்பில் எனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்