Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு மனஅழுத்தத்தால் தற்கொலை செய்யும் எண்ணம்:வீரர் ரொபின் உத்தப்பா.

மனஅழுத்தத்தால் தற்கொலை செய்யும் எண்ணம்:வீரர் ரொபின் உத்தப்பா.

2 minutes read

மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்யும் எண்ணம் கூட வந்தது’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக தற்போது விளையாடி வருகின்ற கர்நாடகாவைச் சேர்ந்த 34 வயதான ரொபின் உத்தப்பா ராஜஸ்தான் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இன்ஸ்டாகிராம் கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையில்,

”2009 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நான் ஒவ்வொரு மனஅழுத்த பிரச்சனையை எதிர்கொண்டேன். அத்துடன் தற்கொலை எண்ணமும் தொடர்ச்சியாக தோன்றியது. அந்த மாதிரியான நேரங்களில் நான் கிரிக்கெட் பற்றி கூட சிந்திப்பது கிடையாது. அப்போது எனது மனதில் கிரிக்கெட் தொலைதூரத்துக்கு போய் விடும்.

இன்றைய நாளை எப்படி சமாளித்து அடுத்த நாளுக்கு எப்படி செல்லப் போகிறேன் என்பதையும், என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, எந்த திசையில் சென்று கொண்டு இருக்கிறேன் என்பதையும் யோசித்து கொண்டே இருப்பேன்.

ஆனால், கிரிக்கெட் இது போன்ற எண்ணங்களை எனது மனதில் இருந்து விலக்கி வைத்தது. கிரிக்கெட் விளையாடாத நேரங்களில் மனரீதியிலான குடைச்சல்களை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

சில நாட்களில் எனக்கு நானே சிந்தித்து கொண்டு இருக்கும் போது, மூன்று வரை எண்ணி முடித்தவுடன் ஓடி சென்று மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து விடலாம் என்ற எண்ணம் ஏற்படும்.

அவ்வாறு செய்யவிடாமல் ஏதோ ஒன்று என்னை தடுத்து நிறுத்தியது. அந்த சமயத்தில் என்னை நானே ஒரு மனிதனாக புரிந்து கொண்டு செயல்படுவதற்கான முயற்சியை தொடங்கினேன்.

அடுத்து வாழ்க்கையில் எனக்கு தேவையான மாற்றங்களை கொண்டுவர வெளிநபர்களின் உதவியை நாடினேன். ஏதோ ஒரு காரணத்தால் எனது மனதில் மகிழ்ச்சியை கொண்டு வரமுடியவில்லை. அதனால் வலைப்பயிற்சியில் கடினமாக பயிற்சி மேற்கொண்டாலும், போட்டிகளில் ஜொலிக்க இயலவில்லை.

எனக்குள் இருக்கும் பிரச்சினையை என்னால் முழுமனதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில சமயங்களில் நமக்குள் இருக்கும் தவறை நாம் ஒத்துக்கொள்ளமாட்டோம். ஆனால் அதனை ஒப்புக்கொள்ள வேண்டியது உண்மையிலேயே முக்கியமானதாகும். தவறை ஏற்க மறுக்கும் உணர்வு எல்லோருக்கும் இருக்கும்.

தங்களுடைய மனரீதியான பிரச்சினைகளை ஒத்துக்கொள்ள கஷ்டப்படும் ஆண்களுக்கு இந்த உணர்வு அதிகம் இருக்கும். சில சமயங்களில் எதிர்மறையான எண்ணங்கள் இருக்க வேண்டியது அவசியமானதாகும் என்று நான் நினைக்கிறேன். அது வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை சந்தித்து நாம் மேலும் வளர உதவிகரமானதாக இருக்கும். எனது எதிர்மறையான எண்ணங்கள் குறித்து நான் வருத்தப்பட்டது கிடையாது. ஏனெனில் அவை என்னை நேர்மறையாக மேம்பட உதவி இருக்கிறது” என அவர் கூறினார்.

இந்தியாவுக்காக இறுதியாக கடந்த 2015இல் விளையாடிய ரொபின் உத்தப்பா, இதுவரை 46 ஒருநாள் மற்றும் 13 – ரி – 20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 2007 ரி – 20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியின் ஒரு அங்கத்தவராகவும் அவர் இருந்தமை சிறப்பம்சமாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More