இங்கிலாந்து அரசாங்கத்தின் “ஒருவர் உள்ளே, ஒருவர் வெளியே” (one in, one out) ஒப்பந்தத்தின் கீழ், இரண்டாவது புலம்பெயர் நபர், இன்று வெள்ளிக்கிழமை (19) பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளார்.
தனது வெளியேற்றத்திற்கு எதிரான சட்ட சவாலில் அந்த புலம்பெயர்ந்தவர் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிறிய படகு நெருக்கடியை (small boats crisis) சமாளிக்க அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களுக்கு மத்தியில் இது ஒரு நிவாரணமாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், குடியேற்றப் பிரச்சினையைக் கையாள சர் கீர் ஸ்டார்மர், இராணுவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
இங்கிலாந்துக்கு வருகை தந்தபோது, இங்கிலாந்து பிரதமர் குடியேற்றம் குறித்து “மிகவும் வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்” என்று டிரம்ப் கூறியிருந்தார்.
கடந்த மாதம் சிறிய படகில் இங்கிலாந்திற்கு வந்த ஓர் எரித்திரிய நாட்டவர் (Eritrean man), இன்று காலை 6.15 மணிக்கு பிரான்சுக்கு அனுப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் தனது வெளியேற்றத்தை தற்காலிகமாக தடுக்க அவர் மேற்கொண்ட முயற்சியில் தோல்வியடைந்தார்.
இந்த வெளியேற்றம், கடந்த மாதம் நடைமுறைக்கு வந்த திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது. இத்திட்டத்தின்படி, ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வந்தவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இதற்கு ஈடாக, பிரான்ஸில் விண்ணப்பித்து இங்கிலாந்திற்கு வர அங்கீகரிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வெளியேற்றம், இத்திட்டத்தின் கீழ் முதல் புலம்பெயர்ந்தவர் வெளியேற்றப்பட்டதற்கு ஒரு நாள் கழித்து வருகிறது.