தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களத்தில் பரபரப்பான மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், வி.கே. சசிகலா, புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். ஆனால், ஊழல் வழக்கில் 2017ஆம் ஆண்டு அவர் சிறை சென்றதையடுத்து, அந்தப் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து, டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். 2021ஆம் ஆண்டு சசிகலா சிறையிலிருந்து விடுதலையான பின்னரும், அவருக்கு மீண்டும் அதிமுகவில் இடம் வழங்கப்படவில்லை.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒரே அணியில் இணைத்து, ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன் என சசிகலா உறுதியளித்திருந்தார். எனினும், சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் இணைக்க முடியாது என பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். இதனிடையே, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மட்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்கப்பட்டார்.
இந்த அரசியல் பின்னணியிலேயே சசிகலா புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவங்களை தாங்கிய கட்சி கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தோழியாக செயல்பட்ட சசிகலாவை, அதிமுகவினர் “சின்னம்மா” என்றே அழைத்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.