அமெரிக்காவின் லூயிஸியானா (Louisiana) மாநிலத்தில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 08 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குடும்ப வன்முறையுடன் தொடர்புடையதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்தச் சம்பவத்தை மேற்கொண்டவர் 31 வயதான ஷமர் எல்கின்ஸ் (Shamar Elkins) ஆவார் என பொலிஸார் தெரிவித்தனர். அவர் மூன்று வெவ்வேறு வீடுகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 08 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 07 பேர் அவரது சொந்தக் குழந்தைகள் ஆவார்.
மூன்று வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் இந்தத் தாக்குதலில் பலியானதாக Associated Press செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள் தீவிரமாக காயமடைந்துள்ளனர். அவர்களைத் தலையில் சுட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த மிகக் கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தாக்குதலுக்குப் பின்னர் ஷமர் எல்கின்ஸ் தப்பிச் செல்ல முயன்றபோது, பொலிஸ் துரத்திச் சென்று அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
சம்பவத்திற்கான நோக்கம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், ஷமர் எல்கின்ஸ் 2019ஆம் ஆண்டு வேறு ஒரு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தவர் என்றும் கூறப்படுகிறது.