சுவிட்சர்லாந்தில் மாபெரும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக, பெர்ன் மாகாணத்தில் உள்ள காண்டர்ஸ்டெக் (Kandersteg) கிராமத்தைச் சேர்ந்த சுமார் 1,300 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காண்டர்ஸ்டெக் பகுதியில் உள்ள Spitze Stei எனப்படும் மலைப்பக்கப் பாறை அமைப்பு மிகப்பெரிய அளவில் சரிந்து பள்ளத்தாக்குக்குள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குறித்த பாறை அமைப்பில் இருந்து சுமார் 15 முதல் 20 மில்லியன் கன மீட்டர் அளவிலான பாறைகள் மற்றும் மண் சரிந்து விழக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டால், பள்ளத்தாக்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வரும் அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காண்டர்ஸ்டெக் கிராமத்தில் வசிக்கும் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பாறை அமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் சாத்தியக்கூறுகள் தொடர்பில் நிபுணர்கள் தொடர்ந்து கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆபத்தான பகுதிகளுக்கான அணுகலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.