ஆங்கிலக் கால்வாய் வழியாக சிறிய படகுகள் மூலம் இங்கிலாந்துக்குள் நுழையும் அகதிகளைத் தடுப்பதில் பிரான்ஸ் பொலிஸாரின் உத்திகள் அதிக பலன் அளித்து வருவதாக இங்கிலாந்து உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கோடையில் நான்கு வார கால அளவில், 4,300 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லவிருந்த 185 சாத்தியமான எல்லைக் கடப்பு முயற்சிகளை பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், புதிய உத்திகளைப் பயன்படுத்தி, கடலில் வைத்து 12 படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
பிரான்ஸ் பொலிஸ் வெளியிட்டுள்ள வீடியோக் காட்சிகளில், அதிகாரிகள் கடற்கரையில் ஜீப்களில் சென்று படகுகளைத் தடுத்து, கைவிடப்பட்ட படகுகளை கத்தியால் கீறி சேதப்படுத்துவது காட்டப்பட்டுள்ளது. எல்லையைக் கடக்க முயல்பவர்கள் அதிகாரிகள் மீது பொருட்களை வீசியபோது, பொலிஸார் ஒருவர் மிளகுத்தூள் ஸ்ப்ரே பயன்படுத்தி பதிலடி தந்துள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 40% குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த திங்கட்கிழமை மட்டும் 250 பேர் எல்லையைக் கடந்து இங்கிலாந்து வந்தடைந்துள்ளனர்.
படகுகள் மற்றும் பிற உபகரணங்கள் கிடைப்பதைக் கடினமாக்குவதே இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளின் முதல் உத்தியாக உள்ளது. இதன்படி, ஜெர்மனியில் படகுகள், மோட்டார்கள் மற்றும் உயிர் காக்கும் உடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற்கரைகளில் மண்ணில் புதைக்கப்பட்ட படகுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால், கடத்தல்காரர்கள் பெரிய படகுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஜூலை மாத இறுதியில், ஒரு சாதாரண பஸ்ஸின் அளவுக்கு இணையாக 13 மீட்டர் (42 அடி) நீளமுள்ள ஒரு படகில் சாதனை அளவாக 165 புலம்பெயர்ந்தோர் இங்கிலாந்தை வந்தடைந்தனர். அதேபோல் சமீபத்தில் 230 பேருடன் பயணித்த ஒரு “மெகா-படகு” கடலில் தடுத்து நிறுத்தப்பட்டது.