முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ.காவல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரின் சி.பி.ஐ. காவலுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை இன்று(செவ்வாய்கிழமை) விசாரித்த உச்சநீதிமன்றம், ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை எதிர்வரும் 5-ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டது.
சிபிஐ, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தேவையில்லை எனவும் அவரை திகார் சிறைக்கு அனுப்ப முடியும் எனவும் சிபிஐ கூறிய நிலையில், செப்டம்பர் 5 ஆம் திகதி வரை தற்போதைய நிலையே தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் 21ஆம் திகதி இரவு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து டெல்லி ரவுஸ் நிழற்சாலை பகுதியில் உள்ள தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரத்தை தங்கள் காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வந்தனர். பின்னர் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் 30ஆம் திகதி வரையும், பின்னர் நேற்று வரையும் நீடித்து தனி நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டிருந்தார்.