வேளாண் திருத்த சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவியுள்ள நிலையில், மத்திய அரசை எதிர்த்து இன்று (திங்கட்கிழமை) உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லி எல்லையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதை ஏற்று எழுத்துப்பூர்வமாக உறுதியளிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இருப்பினும் குறித்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாகவுள்ளனர். இந்நிலையில் 14ம் திகதியில் இருந்து தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன.
இது குறித்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூறுகையில், “சில சங்கங்கள் போராட்டத்தை கைவிடுவதாக கூறியுள்ளன. ஆனால் அவர்கள் எங்களுடன் இணைந்தவர்கள் அல்ல. எங்கள் கோரிக்கைகளில் உறுதியாக உள்ளோம். எங்களுடைய போராட்டங்களை குலைக்க மத்திய அரசு சதி செய்கிறது” எனக் குற்றஞ்சாடியுள்ளனர்.