மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஒருபோதும் உதவாது எனவும் அவர்களை அழித்துவிடும் என்றும் காங்கிஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன், ‘இந்தச் சட்டங்களை திரும்பப் பெறவைக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்’ என அவர் சூளுரைத்துள்ளார்.
வேளாண் சட்டங்களை மீளப்பெறக் கோரிய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக ஆளுநர் மாளிகையை நோக்கி முற்றுகைப் போராட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுத்துள்ளனர். அத்துடன், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லியில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலின் அதிகாரபூர்வ மாளிகை நோக்கி ராகுல் காந்தி தலைமையில், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பேரணியி்ல கலந்துகொண்டார்.
குறித்த பேரணியின் போது ராகுல் காந்தி தெரிவிக்கையில், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவாது. அம்பானி, அதானி ஆகியோருக்கு உதவுவதற்காத்தான் இந்தச் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும்வரை காங்கிரஸ் கட்சி பின்வாங்காது. நிலம் அபகரிப்புச் சட்டம் முன்பு வந்தபோது, விவசாயிகளின் நிலத்தை எடுத்துக் கொள்ள மோடி அரசு முயன்றது. ஆனால், அதையும் அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிதான் தடுத்தது.
இப்போது பா.ஜ.க.வும், அவர்களின் சில நண்பர்களும் சேர்ந்து மீண்டும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்த இந்த வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.