பின்தங்கிய கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கிராமப் பகுதிகளில் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்களை ஊக்குவித்தல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மஞ்சள் விதை உற்பத்தி திட்டம் கிராமிய பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்யும் வேலைத் திட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி. எச்.எல்.தேனுவர தெரிவித்தார். இத் திட்டம் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 22பிராந்திய செயலக பிரிவுகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பயனாளிகளைத் தெரிவு செய்வதில், சமுர்த்தி மானியம் பெறும், சமுர்த்தி மானியத்திற்கு தகுதியான குடும்பங்கள் மற்றும் பெண்கள்
தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விவசாய துறையுடன் சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவுடன் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதற்கான பரிந்துரைகள் பிரதேச செயலாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 941 பயனாளிகளுக்கு சுமார் 1 மில்லியன் ரூபா பெறுமதியான விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் மஞ்சள் உற்பத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, விவசாய அலுவலர்கள் வழங்கிய முன்னேற்ற அறிக்கையின்படி இவ் உற்பத்தித் திட்டம் வெற்றிகரமான நிலையில் இருப்பதாக மாவட்ட விவசாய உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக ஒவ்வொரு 03 மாதங்களுக்கும் ஒரு தடவை விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் அந்தந்த வயல்களில் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கையின் முன்னேற்றம் குறித்த புகைப்படங்களுடன் மாவட்ட விவசாய பணிப்பாளர் அலுவலகத்திற்கு உரிய தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.