அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரகாரம், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த, சிறிதம்ம தேரர் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆகியோர் இம்மாதம் 17 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் டீ.என்.எல். மஹவத்த முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
அதன்போது, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கப்பெறும் வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் அடிப்படையில் சிறிதம்ம தேரருக்கு இன்று பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிணை நிபந்தனைகள் பூர்த்தியானதன் பின்னர் அவர் விடுவிக்கப்படவுள்ளார். சிறிதம்ம தேரர் சார்பில் சட்டத்தரணி பஸீர் மொஹமட் முன்னிலையாகியிருந்தார்.
எவ்வாறாயினும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெறும் வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.