பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக இன்றும் அவரது மனைவி மற்றும் சகோதரர் ஒருவர் ஆகியோரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கொழும்பு – 07 பகுதியிலுள்ள தினேஷ் ஷாப்டரின் இல்லத்துக்குச் சென்று தினேஷ் ஷாப்டரின் மனைவியிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
எனினும், தினேஷ் ஷாப்டரின் சகோதரர்களில் ஒருவர் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றும் தினேஷ் ஷாப்டரின் இல்லத்துக்கு இன்று சென்றிருந்தது.
கடந்த 15ஆம் திகதி மாலை பொரளை பொது மயானத்துக்கு அருகில் தினேஷ் ஷாப்டர், அவரது காரின் இருக்கையில் இருந்தபடியே பிணைக்கப்பட்டு, கழுத்தில் இறப்பர் பட்டி ஒன்று சுற்றப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இதையடுத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் அன்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தினேஷ் ஷாப்ரின் மரணம் தொடர்பில் பலரிடம் விசாரணைகள் தொடர்கின்றன. ஆனால், இதுவரை எவரும் கைதாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.