வவுனியாவில் திருடப்பட்ட தங்க நகைகளுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் கடந்த 3 ஆம் திகதி வீடு புகுந்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளன என்று வீட்டு உரிமையாளரால் வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அவர்களின் வழிகாட்டலில் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பூ.கஜேந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து திருடப்பட்டதாகக் கருத்தப்படும் காப்பு, சங்கிலி உள்ளிட்ட தங்க நகைகளும் மீட்கப்பட்டன.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.