செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நல்லாட்சியில் முற்போக்குக் கூட்டணி சாதித்தவை எவை?

நல்லாட்சியில் முற்போக்குக் கூட்டணி சாதித்தவை எவை?

2 minutes read

2015 இல் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி முதன் முறையாக ஆட்சியில் பங்காளியாகச் செயற்பட்ட நான்கே (2015 – 2019) வருடங்களில் ஏற்படுத்திய சாதனைகளும், அடித்தளங்களும், எமது தொடர்சியான அரசியல் பயணமும் என்ற தலைப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் முகநூலில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

01. நுவரெலிய மாவட்டத்தில் மேலதிக புதிய ஆறு பிரதேச சபைகள் அமைக்கும் தீர்மானம், அரசுக்குள் நடைபெற்ற பெரும் வாத விவாதங்களுக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, புதிய பிரதேச சபைகள் அமைக்கப்பட்டு, மலையகத் தமிழ் மக்களுக்கான தேசிய அரசியல் அதிகாரம் பகிர்வுப் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

02. தேசிய அரசியல் அதிகாரம் பகிர்வுக்குச் சமமாக, தேசிய நிர்வாக அதிகார பரவலாக்கல் கொள்கையின்படி, புதிய பிரதேச செயலகங்களும், கிராம சேவையாளர் பிரிவுகளும் அமைக்கும் தீர்மானம் கொள்கை ரீதியாக ஏற்கப்பட்டு, பிரதேச செயலகங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

03. தோட்டங்களில் ஏழு பேர்ச் சொந்த காணி வழங்கலுக்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.

04. நீண்ட காலமாக நின்று போயிருந்த, இந்திய அரசின் பெருந்தோட்ட வீடமைப்பு உதவி திட்டம், இலங்கை – இந்திய அரசுகளின் ஒப்புதலுடன், நடைமுறைக்கு வந்தது.

05. தோட்டத் தொழிலாளருக்கான சொந்த உறுதி பத்திரம் கொண்ட தனி வீடுகள் கட்டப்படும் திட்டம் மலைநாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

06. அவ்விதம், கட்டப்படும் குடியிருப்புகள் மலையகத்தில் புதிய கிராமங்களாக அறிவிக்கப்பட்டு, மலைநாட்டில் தமிழ் கிராமங்கள் என்ற புதிய காற்று வீச தொடங்கியது.

07. மலையக மக்களால் வாக்களித்துத் தெரிவு செய்யப்படும் பிரதேச சபைகளுக்கு, தம்மைத் தெரிவு செய்யும் தோட்ட புறங்களுக்கு, அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என்ற பிரதேச சபை அதிகார எல்லை சட்டத்தின் 33 ஆம் இலக்க விதி, திருத்தப்பட்டு, பிரதேச சபைகளின் அதிகார வரம்பு, தோட்டபுறங்களுக்கு அதிகாரபூர்வமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

08. மலையக அபிவிருத்திக்கான தனியான அதிகார சபை அமைக்கும் அமைச்சரவைப் பத்திரம், அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டு, இன்று சட்டமாகி, பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகார சபை அமைக்கப்பட்டுள்ளது.

09. சுமார் 300 தோட்டப் புற பாடசாலைகளுக்கு, அவ்வவ் தோட்டங்களில் அவசியப்படும் போது, மேலதிக காணிகளைச் சுவீகரிக்கும் அதிகாரத்தைக் கல்வித்துறைக்கு வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தது.

10, மலையக மக்களுக்கு, தேசிய அரசமைப்புப் பணியில், ஏனைய இனங்களுக்கு வழங்கப்படும் அதே சம அந்தஸ்தும், காத்திரமான சம பங்கும் வழங்கப்பட்டன.

11. மலையக மக்கள் தனி ஒரு தேசிய இனம் என்ற அரசியல் கருத்து இன்று தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

12. பெருந்தோட்ட மறுசீரமைப்பு இலக்கில், தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தைக் கூட்டும் வெளிப்பயிர்ச்செய்கை வருமானத் திட்டம் சீரமைக்கப்பட்டு, தோட்டத் தொழிலாளர்களை, சிறு நில உடைமையாளர்களாக (மலையக விவசாயி) ஆக்கும் திட்டம் பற்றிய கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, அது, தமிழ் முற்போக்குக் கூட்டணி பங்கு கொண்டு ஆதரித்த, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட்டது. இது இப்போது சாதகமான எதிர்காலப் பயன்பாட்டுக்கான ஆவணம்.

13. மலையகப் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில், மலையக சான்றோர் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டதுடன், அக்குழு கூடி ஆராய்ந்து, பல்கலைக்கழகம் தொடர்பான சாத்தியப்பாட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது. – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More