Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தியில் இணையுங்கள்! – பல்கலை மாணவர்களுக்கு ரணில் அழைப்பு

நாட்டைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தியில் இணையுங்கள்! – பல்கலை மாணவர்களுக்கு ரணில் அழைப்பு

2 minutes read

விவசாயம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்காகப் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த முயற்சிகளில் தீவிரமாக இணைந்துகொள்ளுமாறும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் யாழ். ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் அபிவிருத்திக்காகப் பல்கலைக்கழக சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னணி பங்களிப்பு குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்குப் பாரிய பங்களிப்பை வழங்கும் வகையில் வடக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான அரசின் வேலைத்திட்டம் குறித்து மாணவர்களுக்குத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, இந்த நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு மாணவர்களை ஒன்றிணையுமாறும் கேட்டுக்கொண்டார்.

மனித வளமே ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக அமைகின்றது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நவீன தொழில்நுட்பத்தை மையப்படுத்தி அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குதல் உள்ளிட்ட உயர்கல்வித் துறையை விரிவுபடுத்துவதற்கான அரசின் திட்டங்கள் குறித்து இதன்போது மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் விரைவான முன்னேற்றத்தின் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.

ஒரு நாடு என்ற ரீதியில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை வலுவான துறைமுகங்களாக மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

தென்னிந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் மன்னாரிலிருந்து இந்தியாவுக்கான நில ரீதியிலான தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டளவில் 5 வீத பொருளாதார வளர்ச்சியை அடைவதன் இலக்கையும் 2030 ஆம் ஆண்டளவில் படிப்படியாக அதனை 7 – 8 வீதமாக அதிகரிப்பதன் இலக்கு குறித்தும் விளக்கமளித்த ஜனாதிபதி, இலங்கை உயர் பொருளாதார வளர்ச்சி வீதத்தை விரைவில் அடைய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

வளமான மற்றும் அபிவிருத்தியடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை மேலும் வலியுறுத்திய ஜனாதிபதி, பல்கலைக்கழக மாணவர்களும் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதன்போது மாணவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More