செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குப் பேரவை ஆதரவ! – கஜேந்திரகுமார் அறிவிப்பு

கூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குப் பேரவை ஆதரவ! – கஜேந்திரகுமார் அறிவிப்பு

2 minutes read

“தமிழர் தாயகத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் கூடிய ஆசனங்களைப் பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாநகர முதல்வர் மற்றும் தவிசாளர் தெரிவுகளில் தமிழ்த் தேசியப் பேரவை ஆதரவு வழங்கும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்களில் இரண்டாவது நிலையில் கூடிய ஆசனங்களைப் பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குப் பிரதி முதல்வர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளில் தமிழ்த் தேசியப் பேரவை ஆதரவு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். கச்சேரி அருகாமையிலுள்ள வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பெயரிலும் அதன் சைக்கிள் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிக்குக் கிடைக்கப் பெற்ற மேலதிக ஆசனங்கள் மூலம் கட்சியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் கூடிக் கலந்துரையாடி கொள்கை அடிப்படையில் ஒருமனதாக மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்களின் வெளிப்பாடு, சபைகளின் ஆட்சி நிர்வாகத்தை அமைப்பதில் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு என்பவற்றைக் கருத்தில்கொண்டு தமிழ்த் தேசிய ப் பேரவை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்தத் தீர்மானத்துக்கமைய பின்வரும் முடிவுகள் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் அறிவிக்கப்பட்டன.

தீர்மானத்துக்கு அமைய எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

மாநகர சபைகள் உட்பட தமிழர் தாயகத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடந்து முடிந்த தேர்தலில் கூடிய ஆசனங்களைப் பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்ற சபைகளில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு முதல்வர், தவிசாளர் தெரிவுகளில் ஆதரவு வழங்குவதுடன் அவ்வாறான சபைகளுக்கான முதல்வர், தவிசாளர் தெரிவுகளில் தமிழ்த் தேசியப் பேரவை போட்டியிடமாட்டாது.

அதேபோன்று தமிழ்த் தேசியப் பேரவை அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சபைகளில் தவிசாளர் தெரிவுக்குப் போட்டியிடும். அதன்போது மக்கள் தேர்தலில் வழங்கிய ஆணைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையில் தமிழ்த் தேசியப் பேரவை இரண்டாவது நிலையில் இருக்கும் சபைகளில் துணை முதல்வர், உப தவிசாளர் பதவிகளுக்குப் போட்டியிடும்.

பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையில் இரண்டாவது நிலையில் இருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு துணை முதல்வர், உப தவிசாளர் தெரிவுக்குத் தமிழ்த் தேசியப் பேரவை ஆதரவு வழங்கும்.

எந்தவொரு நிலையிலும் சிங்களப் பௌத்த பேரினவாதக் கட்சிகளுக்கும் அவற்றுக்கு ஆதரவான கட்சிகளுக்கும் இவ்வாறான பதவிகளுக்கான தெரிவுகளுக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது.

இவற்றின் மூலம் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி நிர்வாகத்தைத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கைகளில் வைத்திருப்பதுடன் எதிர்காலத்தில் எவ்வித இடையூறுகளும் இல்லாது மக்களுக்கான பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று தமிழ்த் தேசியப் பேரவை எதிர்பார்ப்பதுடன் இதன் மூலம் கட்சிகளுக்கிடையே புரிந்துணர்வை வளர்க்க முடியும் என்றும் தமிழ்த் தேசியப் பேரவை நம்புகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More