செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டுமென வடக்கு கட்சிகள் விரும்புகின்றன | பிமல் ரத்நாயக்க

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டுமென வடக்கு கட்சிகள் விரும்புகின்றன | பிமல் ரத்நாயக்க

2 minutes read

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது. தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கை மக்களுக்கான கட்சியாகும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் நேற்று புதன்கிழமை (22) ஆரம்பிக்கப்பட்டது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் அரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், 2027 அக்டோபர் 26ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, குறிகாட்டுவான் இறங்குதுறையை இணைக்கும் வீதி பணிகளும் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.

இந்நிகழ்வில், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகம், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ச.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், வடக்கு மாகாணக் கடற்படைத் தளபதி, யாழ். மாவட்டச் செயலாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:

நெடுந்தீவில் 1,400 குடும்பங்கள் வாழ்கின்றன. சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித்துறைக்கு இங்கு நிறைய இடம் உள்ளது. எனவே, அப்பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

போக்குவரத்து பிரச்சினைதான் இப்பகுதிக்கு பெரும் பிரச்சினையாகும். இதனால் பாடசாலையைக்கூட உரிய நேரத்துக்கு ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அப்பகுதியில் உள்ள அரச அலுவலகங்கள்கூட 3 மணிக்கு மூடப்படுகின்றது.

நெடுந்தீவு இலங்கை படத்தில் இருந்தாலும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் இங்கு கிடைக்கவில்லை. போக்குவரத்து பிரச்சினையே நெடுந்தீவின் கழுத்தை நெறித்துள்ளது எனலாம்.

நெடுந்தீவுக்குள்ளும் பிரச்சினைகள் உள்ளன. வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. வேறு குறைப்பாடுகள் இருப்பின் அவற்றை தீர்க்கலாம்.

எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பு அரசுகள் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தை கைவிட்டிருந்தன. ஆனால் எமது ஆட்சி அவ்வாறு இல்லை. யாழ்ப்பாணம் மற்றும் தீவக பகுதிகளுக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நெடுந்தீவு, பருத்தித்துறை மற்றும் நைனாதீவு போன்ற பகுதிகளுக்கு யாழ்ப்பாண அரசாங்கம் (உள்ளாட்சி மன்றங்கள்) கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

கப்பல் போக்குவரத்து, இறங்குதுறைமுகம் பிரச்சினைகள் உரியவகையில் தீர்க்கப்படும். நெடுந்தீவுக்கு இரு இ.போ.ச பஸ்கள் கோரப்பட்டிருந்தன. அதனையும் நாம் விரைவில் வழங்குவோம்.

அதேவேளை, எமது அரசாங்கத்திடம் இனவாதம் இல்லை. கொள்கை அடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றோம். எனினும், வடக்கிலும், தெற்கிலும் உள்ள சில குழுக்கள் இனவாதம் பேசி அரசியல் நடத்துகின்றன.

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.