செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

1 minutes read

கடந்த காலங்களில் மனித உயிர்களை அழித்து, தங்களது கைகளை இரத்தத்தால் நனைத்துக்கொண்ட கொலையாளிகளும் ஊழல்வாதிகளும், மீண்டும் தங்களைக் கழுவிக்கொண்டு உத்தமர்களைப் போல சமூகத்தின் முன்னால் வர நாம் இடமளிக்கப் போவதில்லை. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த உண்மைகளை மூடிமறைக்க எவ்வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தல திருவிழாவை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விசேட ஆராதனையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2024 செப்டம்பர் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, புதிய ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தபோது, இந்த பாரதூரமான குற்றத்தின் உண்மைகளை ஒருபோதும் மறைக்கவிடமாட்டேன் என்று வாக்குறுதியளித்தார். அதற்கமைய, தற்போதைய விசாரணைகள் புத்துயிர் பெற்றுள்ளன.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் சதித்திட்டம் ஒன்று இருந்தமைக்கான உறுதியான சான்றுகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வருவதாகப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அன்று அதிகாரத்தில் இருந்தவர்கள் மூடிமறைத்த விடயங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.

இந்த விசாரணைகளைச் சீர்குலைக்க ஒரு தரப்பு தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. தங்களின் அரசியல் பிம்பம் சிதைந்துவிடும் என்ற அச்சத்தில், இந்தச் சதியில் ஈடுபட்டவர்கள் ஊடகங்கள், போராட்டங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் மூலம் விசாரணைகளைப் பின் தள்ள முயற்சிக்கின்றனர். நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் கைவைக்கவும், சாட்சியங்களை அச்சுறுத்தவும் இவர்கள் எடுக்கும் முயற்சிகள் அருவருக்கத்தக்கவை.

அரசாங்கம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் அஞ்சாமல், உண்மையை வெளிப்படுத்தும் பணியைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம். யாராவது குற்றம் செய்யவில்லை என்றால், அவர்கள் விசாரணைகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை. மாறாக, உண்மையைத் தேடும் இவ்விசாரணைகளுக்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணைகளைத் தடுப்பவர்கள், தாங்கள் இக்குற்றத்துடன் தொடர்புடையவர்கள் என்பதையே உறுதிப்படுத்துகிறார்கள்.

இந்த கொடூரக் கொலை குறித்து மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் நீதிக்காகவும், தார்மீக வலிமைக்காகவும் துணிச்சலுடன் முன்வந்து சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். இத்தகைய சவால்களைக் கண்டு அஞ்சாமல், உண்மையை நிலைநாட்ட உறுதியுடன் செயற்பட வேண்டும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.