செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணிலுக்கு மனோ பகிரங்க எச்சரிக்கை!

ரணிலுக்கு மனோ பகிரங்க எச்சரிக்கை!

1 minutes read

“தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் சம்பந்தமாக மலையகக் கட்சிகளுடனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சர்வகட்சி மாநாட்டை தமிழ் முற்போக்குக் கூட்டணி புறக்கணிக்கும்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அக்கரைப்பத்தனையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற தொழிலாளர் தேசிய முன்னணி செயற்பாட்டாளர்களின் விசேட சந்திப்பில் பங்கேற்று பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழக அரசின் அழைப்பையேற்று, மலையக மக்கள் சார்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சென்னை செல்கின்றேன். தமிழக வம்சாவளி தமிழர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே செல்கின்றேன். இதன்போது எமது மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை, துயரங்களை, கஷ்டங்களையெல்லாம் தமிழக முதலமைச்சரிடம் எடுத்துக்கூறவுள்ளேன்.

வடக்கு, கிழக்கில் வாழ்பவர்கள்தான் தமிழர்கள். அவர்களுக்கு மட்டுமே பிரச்சினை உள்ளது என்றே இதுவரை காலமும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

வடக்கு, கிழக்கு பற்றி பேசுவது தப்பில்லை. ஆனால், மலையகத்தை மறந்துவிட்டனர். இந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. மலையகத் தமிழர்களும் சுயமரியாதையுள்ள ஓர் இனம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நானும், திகாம்பரமும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினோம். அரசில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். மறுத்துவிட்டோம். பதவிகள் எல்லாம் எங்களை தேடி வரும் எனக் கூறினோம். நாட்டின் ஜனாதிபதி நீங்கள், எங்கள் மக்கள் மீது அக்கறை கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைத்தோம்.

வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துகின்றீர்கள். தேசிய இனப் பிரச்சினையானது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. எங்களிடமும் பேசுங்கள் என்றோம்.

எமது மக்களுக்கும் அரசியல், சமூக மற்றும் கலாசார அபிலாஷைகள் உள்ளன. தேவைப்பாடுகள் உள்ளன. எனவே, எங்கள் பிரச்சினை பற்றியும் கண் திறந்து பாருங்கள், காது கொடுத்து கேளுங்கள் எனவும் குறிப்பிட்டோம்.

மலையகக் கட்சிகளை அழைத்து ஜனாதிபதி பேச்சு நடத்தாதுவிட்டால், சர்வகட்சி கூட்டத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி பங்கேற்காது. எங்களை மதித்தால்தான் நாமும் மதிப்போம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வந்தால் போட்டியிடுவோம். நாம் தேர்தலுக்குத் தயார்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More