செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு பொலிஸ் அவசர அழைப்புகளுக்கு AI கண்காணிப்பு – தேவையற்ற அழைப்புகள் தானாக திசைதிருப்பப்படும்!

பொலிஸ் அவசர அழைப்புகளுக்கு AI கண்காணிப்பு – தேவையற்ற அழைப்புகள் தானாக திசைதிருப்பப்படும்!

1 minutes read

இங்கிலாந்தில் பொலிஸ் அவசர சேவைக்கு வரும் தேவையற்ற மற்றும் பொலிஸாருடன் தொடர்பில்லாத அழைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இங்கிலாந்து பொலிஸ் அவசர சேவைகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 2 கோடி அழைப்புகள் கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றில் சுமார் 20 சதவீதமானவை, பொலிஸாரின் பொறுப்புக்கு உட்படாத விடயங்கள் தொடர்பான அழைப்புகளாக இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக, உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட பிற அரச மற்றும் பொது சேவை நிறுவனங்களிடம் தொடர்புகொள்ள வேண்டிய விடயங்களுக்காகவும் பொலிஸ் அவசர சேவைக்கு மக்கள் அழைப்புகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய AI அமைப்பு, அழைப்பு இணைக்கப்படும் ஆரம்ப கட்டத்திலேயே அதன் நோக்கத்தை அடையாளம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அழைப்பின் காரணம் பொலிஸ் நடவடிக்கை தேவைப்படாத விடயமாக இருப்பது கண்டறியப்பட்டால், அந்த அழைப்பை பொலிஸ் அதிகாரிகளிடம் செல்ல விடாமல், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றம் அல்லது பிற உரிய அமைப்பை நோக்கி தானாகவே திசைதிருப்பும்.

இதன்மூலம் பொலிஸ் அவசர தொலைபேசி சேவைகளில் ஏற்படும் தேவையற்ற அழைப்புகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, உண்மையில் பொலிஸ் உதவி தேவைப்படும் அவசர அழைப்புகளுக்கு அதிகாரிகள் விரைவாக பதிலளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இங்கிலாந்து பொலிஸ் துறைக்கு ஆண்டுதோறும் 8.5 மில்லியன் பவுண்டுகள் வரை சேமிக்க முடியும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சேமிக்கப்படும் நிதி, பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் வீதிக் குற்றங்களைத் தடுப்பது மற்றும் அவற்றைக் கையாள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் முதலீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், AI தொழில்நுட்பம் உண்மையான அவசர அழைப்புகளைத் தவறாக திசைதிருப்பிவிடக் கூடாது என்பதற்காக வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்து, குற்றச்செயல் அல்லது உடனடி பொலிஸ் தலையீடு தேவைப்படும் சூழ்நிலைகளில், அந்த அழைப்புகள் உரிய முறையில் பொலிஸ் சேவைக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் அமைப்பில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பொலிஸ் அவசர சேவைகளின் செயல்திறனை மேம்படுத்தவும், அதிகாரிகளின் நேரத்தையும் வளங்களையும் முக்கியமான குற்றச் சம்பவங்களில் பயன்படுத்தவும் இந்த AI திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.